ரேபீஸ் பாதித்த இறந்த எருமை பாலில் தயாரான தயிர் பச்சடி! தடுப்பூசி போட்டுக் கொள்ள குவிந்த கிராமத்தினர்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராபிஸ் பாதிப்பால் இறந்த எருமை மாட்டின் பாலில் செய்யப்பட்ட தயிர் பச்சடி சாப்பிட்ட 200-க்கும் மேற்பட்டோர் ராபிஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பதாயூன் மாவட்டத்தில் உள்ள பிப்ரவுல் கிராமத்தில், கடந்த மூன்று நாட்களாக ராபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்கின்றனர்.

இதுகுறித்து விசாரித்த போது, கடந்த டிசம்பர் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று உயிரிழந்த ஓரன் சாஹுவுக்காக கிராமத்தில் ஒரு சடங்கு நடத்தப்பட்டதாம். இந்த சடங்கில் கிராமத்தினர் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரியாணியும் தயிர் பச்சடியும் பரிமாறப்பட்டதாம்.
அந்த தயிர் பச்சடிக்காக பயன்படுத்தப்பட்டது எருமையாம். அந்த எருமை, இந்த துக்க நிகழ்வு நடந்த 3 நாளில் உயிரிழந்தது. அப்போது அந்த எருமையை ஒரு வெறிநாய் கடித்ததாக சொல்லப்படுகிறது.
இது குறித்து அறிந்த அந்த எருமையின் ஓனர், எருமைக்கு சிகிச்சை ஏதும் அளிக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டதாக தெரியவந்தது. இந்த நிலையில் அந்த பாலில் இருந்து தானே தயிர் தோயவைக்கப்பட்டு பச்சடி செய்யப்பட்டது என்பதை உணர்ந்த கிராமத்தினர் உயிருக்கு அஞ்சினர்.
இந்தநிலையில், கிராம மக்கள் அவசரக் கூட்டம் நடத்தி, ராபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடிவெடுத்தனர். கிராமத் தலைவர் ரேணு தேவியின் கணவர் தீபக் குமார் கூறுகையில், "கடந்த டிசம்பர் 26 முதல் இரண்டு நாட்களில் 200-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர். மற்றவர்களும் தடுப்பூசி போடுகின்றனர்" என்றார். மக்களிடையே ராபிஸ் தொற்று குறித்த அச்சம் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எருமை பால் மூலம் ராபிஸ் பரவாது என்ற தகவல் மக்களுக்குச் சரியாக சென்றடையவில்லை என்று குமார் கூறினார். உஜ்ஜானி CHC கண்காணிப்பாளர் டாக்டர் சர்வேஷ் குமார், "கடந்த இரு நாட்களில் 250 பேர் எங்கள் மையத்தில் தடுப்பூசி பெற்றனர். வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 110 பேருக்கு ஊசி போடப்பட்டது" என உறுதிப்படுத்தினார்.
பீதியடைய வேண்டாம் என டாக்டர் சர்வேஷ் குமார் கேட்டுக் கொண்டார். மருத்துவக் குழுக்கள் தொடர்ந்து கிராம மக்களுக்கு ஆலோசனைகளை வழங்குகின்றன. பதாயூன் ஆரம்ப சுகாதார நிலையத்தின் டாக்டர் மகேஷ் பிரதாப், தொற்று பயத்தில் மக்கள் சுகாதார மையங்களை நாடுவதாகத் தெரிவித்தார்.
எருமையைக் கடித்த தெருநாய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இறந்த எருமைக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் புதைக்கப்பட்டதால், இறப்புக்கான காரணம் தெரியவில்லை. பிப்ரவுல் கிராமத்தின் மக்கள்தொகை சுமார் 1,800.
கடந்த நவம்பரில் கோரக்பூரில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. அங்கு, வெறிநாய் கடித்த மாட்டின் பாலில் தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை உண்ட பலர் ராபிஸ் தடுப்பூசி செலுத்த விரைந்தனர்.












Click it and Unblock the Notifications