உபி தேர்தல்: "உங்களால் அழிந்த 700 விவசாயிகளிடம் கூட்டணி பற்றி கேளுங்கள்.." ஜெயந்த் சௌத்ரி பொளேர்
லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தலில் ஜாட் சமூகத்தினரின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் பாஜக ஈடுபட்டுள்ள நிலையில், ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் ஜெயந்த் சௌத்ரியின் கருத்து பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும். பிப். 10இல் தொடங்கி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இதில் உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக அதிக முக்கியத்துவம் செலுத்தி வருகிறது. நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 2017இல் பெற்றதைப் போல மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்பது பாஜகவின் இலக்கு.

பாஜக
இருப்பினும், தற்போது அங்கு நடைபெறும் விஷங்கள் பாஜகவுக்கு சாதகமாக இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் 3 அமைச்சர்கள் உட்பட மொத்தம் 9 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து விலகினர். அவர்களில் பெரும்பாலானோர் சமாஜ்வாதி கட்சி பக்கமே சென்றனர். இவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக உள்ள ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிக்கு அழைப்பு
இதைச் சமாளிக்க பாஜக பல திட்டங்களை எடுத்து வருகிறது. குறிப்பாக உ.பி-இல் முக்கியமான சமூகங்களில் ஒன்றான ஜாட் சமூகத்தினரின் வாக்குகளைப் பெறும் முனைப்பில் உள்ளது. இதற்காக சங்கீத் சோம், சஞ்சீவ் பல்யான் மற்றும் பர்வேஷ் வர்மா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியிடம் கூட்டணிக்கு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தனர். உத்தரப் பிரதேசத்தில் ஜாட் தலைவர்களை அமித்ஷா நேரடியாகச் சந்தித்துப் பேசினார்.

அமித் ஷா
மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் ஜாட் சமூகத்தினர் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதாக உள்ளது. இதனால் ஜாட் சமூகத்தினரிடையே நல்ல செல்வாக்கு உள்ள தலைவர்களில் ஒருவரான ராஷ்டிரிய லோக் தள தலைவர் ஜெயந்த் சௌத்ரியை கூட்டணியில் கொண்டு வர முயன்று வருகிறது. ராஷ்டிரிய லோக் தளம் தவறான கூட்டணியில் உள்ளதாகவும் இப்போதும் அவர்களுக்கான கதவு திறந்து உள்ளதாகவும் கூறி அமித் ஷா நேரடியாகவே கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.

பதிலடி
ராஷ்டிரிய லோக் தளம் இப்போது அகிலேஷ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல மற்ற பாஜக தலைவர்களும் ராஷ்டிரிய லோக் தள தலைவர் ஜெயந்த் சௌத்ரியை அகிலேஷ் யாதவ் ஏமாற்றிவிட்டதாகவும் அவர் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் கூட்டணிக்குத் தூது விட்டு வருகின்றனர். இந்நிலையில், கூட்டணி குறித்து என்னிடம் கேட்காதீர்கள் என ஜெயந்த் சௌத்ரி பதிலடி கொடுத்துள்ளார்.

700 விவசாய குடும்பங்கள்
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "கூட்டணி என்னை அழைக்காதீர்கள், உங்களால் அழிந்த 700 விவசாய குடும்பங்களின் வீடுகளுக்கு இதை அனுப்புங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இது ஜெயந்த் சௌத்ரியை எப்படியாவது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று முயன்று வந்த பாஜக தலைவர்களுக்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

ஏன் முக்கியம்
ஏனென்றால் கடந்த 2017இல் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ஜாட் சமூகத்தினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் இருந்தது. இதனால் ஜாட் சமூகத்தினரின் வாக்கு அப்படியே பாஜகவுக்கு சென்றது. ஆனால், விவசாயிகள் போராட்டம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களுக்குப் பிறகு ஜாட் சமூகத்தினர் பாஜக மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஜாட் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகள் அப்படியே அகிலேஷ் கட்சி செல்லும் சூழல் உருவானது. இது பாஜகவின் வெற்றி வாய்ப்பை கடுமையாகப் பாதிக்கும் என்பதாலேயே ஜெயந்த் சௌத்ரியை தன்வசம் இழுக்க முயன்றது பாஜக.
Recommended Video

பாஜக நம்பிக்கை
இந்தச் சூழலில் ஜெயந்த் சௌத்ரியின் இந்த கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் அங்குள்ள முக்கிய பாஜக தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான சஞ்சீவ் பல்யான், "தேர்தலுக்கு முன்பு ஜாட் சமூகத்தினர் குறித்து பிம்பத்தை ஏற்படுத்தச் சிலர் முயல்கின்றனர். ஆனால் தேர்தலில் ஜாட் சமூகத்தினர் எப்போதும் பாஜகவுக்கே வாக்களித்துள்ளனர். 2014, 2017 மற்றும் 2019 தேர்தல்களில் இதே தான் நடந்துள்ளது. அப்போது 2022 தேர்தலிலும் இதே தான் நடக்கும். அகிலேஷ் யாதவுக்கு யாரும் வாக்களிக்கப் போவதில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications