டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்த 'சூப்பர்' திட்டம்! கலக்கும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: கிராம பஞ்சாயத்து அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்கான 'சமர்த் 2023' எனும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. அந்த வகையில் தற்போது 'சமர்த் 2023' எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் பேசிய யோகி,

"உத்தரப் பிரதேசம் வரம்பற்ற சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஒரு மாநிலமாகும். இங்கு அனைத்து தொழில்கள் தொடங்குவதற்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. இதனால் புதுப்புது திட்டங்கள்/கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் தனிச் செயலகம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன, விரைவில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துக்கும் தனிச் செயலகம் அமைக்கப்படும்.
செயலகம் வந்துவிட்டால் மக்கள் தங்கள் தேவைகளுக்காக மாவட்ட அல்லது மாநில தலைநகருக்கு வரவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இந்த செயலகத்தில் கணினி ஆப்ரேட்டர்கள் இருப்பார்கள். இவர்கள் கிராம மக்களுக்கு தேவையான சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்குவார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி செல்ல வேண்டும்.
அரசின் திட்டங்கள் மக்களிடையே தடையின்றி சென்று சேர்வதற்கு இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை அவசியமானதாகும். உத்தரப் பிரதேசம் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை பலம் சேர்க்கும். தேசிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையை மாநிலத்தின் அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு சேர்த்துள்ள மாநிலம் என்கிற பெயரை உத்தரப் பிரதேசம் விரைவில் எட்டும்" என்று யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications