வேட்பாளர்களுக்கு ஆள் இல்லை.. பரிதவிக்கும் காங்கிரஸ்.. உ.பியில் சோகக் கதை!
லக்னோ: போராடி பெற்ற தொகுதிக்கு வலிமையான வேட்பாளர் இல்லாமல் தேவே கவுடா தொகுதியை திருப்பி கொடுத்தார். அதுபோல உபி மாநிலத்தில் போட்டியிட வலிமையான வேட்பாளர்கள் இன்றி காங்கிரஸ் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
நாட்டிலேயே மிகபெரிய மாநிலமான உபியில் பகுஜன் சமாஜும், சமாஜ் வாடியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இவர்கள் காங்கிரசை தங்களோடு சேர்க்க மறுத்து விட்டதால் காங்கிரஸ் உபியில் உள்ள குட்டி குட்டி கட்சிகளை தன்னோடு சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்திக்கிறது. இந்த மாநிலத்தில்தான் ராகுலும், சோனியாவும் போட்டியிட உள்ளனர்.
அதே போன்று மோடி, ராஜ்நாத்சிங் போன்ற பாஜக தலைவர்களும் இங்குதான் போட்டியிட உள்ளனர். ஆகவே இரு கட்சிகளும் போட்டியாளர்களுக்கு ஏற்ற வலிமையான வேட்பாளர்களை நிறுத்த முயன்று வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இன்னமும் அடையாளம் காண முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
முதல்வர் யோகி
உபி முதல்வர் ராஜினாமா செய்ததால் காலியான கோரக்பூர் தொகுதியில் சமாஜ் வாடி கட்சி சார்பில் நிறுத்தப் பட்டிருந்த பிரவீன் நிஷாத் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் கடந்த இடைதேர்தலில் வென்றார். இவரை பாஜக இப்போது தனது பக்கம் இழுத்து விட்டது. இவர் இப்போது கோரக்பூரின் பாஜக வேட்பாளாராக களம் காண்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ் சரியான வேட்பாளரை தேடி வருகிறது.
லக்னோவில் ராஜ்நாத் சிங்
லக்னோ தொகுதியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். அவர் கடந்த 2014 ம் ஆண்டும் இதே தொகுதியில் இருந்துதான் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவரை எதிர்த்து அப்போதைய உபி மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி போட்டியிட்டார். இப்போது ரீட்டா பகுகுணா ஜோஷி பாஜகவில் இணைந்து விட்டார்.
ஆள் இல்லை
லக்னோவில் வலிமையான வேட்பாளாராக களமிறங்கும் ராஜ்நாத் சிங்கை எதிர்க்க காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தேடியபோது உயர்சாதி பிரிவை சார்ந்த ஜிதின் பிரசாதா தனது விருப்பத்தை தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர்களும் இவர் சரியான போட்டியாக இருப்பார் என்று கருதியபோது அவர் தனது சொந்த தொகுதியான தரவுரா தொகுதியில் போட்டியிடுவதாக கூறிவிட்டார். இதனால் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிட இப்போது காங்கிரஸ் வேறு வலிமையான வேட்பாளரை தேடி வருகிறது.
ரீட்டா பகுகுணா ஜோஷி
இதேபோன்று கடந்த முறை லக்னோவில் போட்டியிட்ட ரீட்டா பகுகுணா ஜோஷியை பாஜக தனது வேட்பாளாராக அறிவித்து அலகபாத் தொகுதியில் களம் இறக்கியுள்ளது. ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு தனிப்பட்ட செல்வாக்கு உண்டு என்பதால் அலகபாத் காங்கிரஸ் தலைவர்களும் இவரை ஆதரித்து வருகிறார்கள். இதனால் காங்கிரஸ் கட்சி அலகாபாத் தொகுதிக்கும் வேட்பாளரை தேடி வருகிறது. ஜோஷிக்கு எதிராக போட்டியிட நடிகர் சஞ்சய் தத்தை காங்கிரஸ் கோரியபோது அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் வேறு வேட்பாளரை காங்கிரஸ் தீவிரமாக தேடி வருகிறது.
மோடி தொகுதி
இந்த தொகுதிகளில் நிலைமை இப்படி இருந்தாலும் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த முறை போட்டியிட்டவரே விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ம் ஆண்டு தேர்தலில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் போட்டியிட்டார். ஆனால் இவருக்கு 3 ம் இடமே கிடைத்தது.
பிரியங்கா போட்டியிடுவாரா
இந்த நிலையில் வாராணாசி தொகுதியில் மோடியை எதிர்க்க பிரியங்கா காந்தியை களம் இறக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால் பிரியங்காவின் திட்டம் வேறுமாதிரி இருக்கிறது. இதுவரை தான் போட்டியிடுவேனா இல்லையா என்பது பற்றி கூறாதவர். வாரணாசி தொகுதியில் தன்னை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரித்தால் களம் இறங்க தயார் என்று எண்ணுவதாக தெரிகிறது.