ஃபேன், லைட் யூஸ் செஞ்சதுக்கு ரூ 128 கோடி கரண்ட் பில்லா.. இவ்ளோ பெரிய தொகையை யோகி கூட கட்டமாட்டாரே
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூரில் வெறும்
ஃபேன் மற்றும் லைட் பயன்படுத்திய குடும்பத்துக்கு மின் கட்டணம் 128 கோடி ரூபாயாக வந்துள்ளதால் அக்குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஹாப்பூரில் உள்ள சாம்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷமீம். இவர் தனது மனைவியுடன் ஒரு குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு மின்கட்டணமாக ரூ 128 கோடிக்கு மேல் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷமீம், உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்று தனது வந்த கட்டணம் குறித்து தெரிவித்துள்ளார். அதற்கு அதிகாரிகளோ மின் கட்டணத்தை உடனடியாக செலுத்திவிடுங்கள். இல்லாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவித்தனர்.

ரூ 128 கோடி
இதுகுறித்து ஷமீம் செய்தியாளர்களிடம் கூறுகையில் நாங்கள் பரம ஏழை. எங்கள் வீட்டில் ஃபேன் மற்றும் லைட் மட்டுமே இருக்கிறது. ஆனால் மின் கட்டணம் 128 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் நாங்கள் முறையிட்ட போதிலும் எங்கள் கோரிக்கைகளை காது கொடுத்துக் கூட கேட்கவில்லை.

தொகை
கரண்ட் பில் கட்டாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை மட்டும் விடுகின்றனர். எங்களுக்கு மாதாமாதம் ரூ 700 முதல் 800 வரை மட்டுமே மின் கட்டணம் வரும். ஆனால் இவர்கள் ஹாப்பூர் நகரத்தின் மொத்த மின் கட்டணத்தையும் எங்களை செலுத்த கூறுவது போல் ஒரு தொகையை கணக்கிட்டுள்ளனர்.

எப்படி செலுத்த முடியும்
நாங்களோ ஏழை. எப்படி அத்தகைய தொகையை செலுத்த முடியும்? என்றார். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது இது முழுக்க முழுக்க தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம். இந்த பிரச்சினை சரி செய்யப்படும்.
|
தற்கொலை
இதெல்லாம் பெரிய விஷயமே அல்ல என்றார். கடந்த ஜனவரி மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் 2 கிலோ வாட் மின்சார இணைப்புக்கு ரூ 23 கோடி கட்டணம் செலுத்துமாறு அனுப்பப்பட்டிருந்தது. அதுபோல் கடந்த ஆண்டு மே மாதம் மகாராஷ்டிர மாநிலம் ஔரங்கபாத்தில் உள்ள காய்கறி வியாபாரிக்கு 8.64 லட்சம் மின் கட்டணம் செலுத்துமாறு ரசீது வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications