இதுதான் 'கராத்தே அடி'.. கடத்தி வந்தவர்களை புரட்டி எடுத்த 17 வயது சிறுமி.. உபியில் சுவாரசிய சம்பவம்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் தன்னை கடத்த வந்தவர்களை கராத்தே தாக்குதல் மூலம் அலறவிட்ட சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் இந்த அச்சுறுத்தல் பெண்களுக்கு அதிக அளவில் உள்ளது.
வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஆபத்து என்ற சூழலில் தான் அங்கு பெண்களின் நிலைமை உள்ளது. தினந்தோறும் குறைந்தபட்சம் 10 பாலியல் வன்கொடுமைகளாவது உத்தரபிரதேசத்தில் அரங்கேறி விடுகின்றன. இதுபோன்ற வன்முறைகளை தடுக்க வேண்டிய போலீஸாரும், சில நேரங்களில் குற்றவாளிகளுடன் கைகோத்து நிற்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே, பெண்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்வது அவசியமாகி உள்ளது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

ஆட்டோவில் பள்ளி சென்ற சிறுமி
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ராய்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ் தாக்குர். சிறிய டயர் கடை நடத்தி வரும் இவருக்கு அனுஷ்யா (17) உட்பட இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அனுஷ்யா அங்குள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, நேற்று முன்தினம் பள்ளிக்கு நேரமாகி விட்டதால் பாதி வழியில் ஆட்டோ பிடித்து அனுஷ்யா சென்று கொண்டிருந்தார். ஆட்டோவில் ஓட்டுநருடன் அவரது நண்பரும் இருந்துள்ளார்.

வழிமாறிய ஆட்டோ
இந்நிலையில், சிறிது நேரத்தில் ஆட்டோ, பள்ளிக்கு செல்ல வேண்டிய வழியில் இருந்து மாறி வேறு வழியாக சென்றுள்ளது. இதையடுத்து, மாணவி அனுஷ்யா, " ஏன் வழிமாறி செல்கிறீர்கள்" எனக் கேட்டுள்ளார். ஆனால் ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வண்டியை நிறுத்துமாறு சத்தம் போட்டுள்ளார். எனினும், அதனை சட்டை செய்யாத ஓட்டுநர், அங்கிருந்த ஏரிப்பகுதிக்கு அருகே ஆட்டோவை ஓட்டிச் சென்றார். மேலும், ஆட்டோ ஓடும் போதே பின்னால் வந்த ஓட்டுநரின் நண்பர், கையில் ஒரு துணியை எடுத்து அனுஷ்யாவின் வாயில் கட்ட முயன்றார்.

சரமாரி அடி - உதை
உடனே நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அனுஷ்யா, அவரது முகத்தில் சரமாரியாக குத்துகளை விட்டார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த இளைஞர் நிலைக்குலைந்து போனார். பின்னர் இதனை பார்த்த ஆட்டோ ஓட்டுநர், வண்டியை நிறுத்தி அனுஷ்யாவை அடிக்க பாய்ந்தார். அப்போது ஆட்டோவை விட்டு கீழே இறங்கிய அனுஷ்யா, அவரை காலாலேயே உதைத்து பந்தாடினார். இதனால் பயந்து போன ஆட்டோ ஓட்டுநரும், அவரது நண்பரும் அங்கிருந்து சென்றனர்.

கைகொடுத்த 'கராத்தே'
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு தனியாக சென்ற மாணவி, நடந்த விவரங்களை கூறி வழக்கு பதிவு செய்யுமாறு கூறினார். போலீஸ் விசாரணையில், மாணவி அனுஷ்யா கராத்தேவில் 'பிளாக் பெல்ட்' வாங்கியவர் என்பது தெரியவந்தது. அவரது துணிச்சலை போலீஸார் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், மாணவியை கடத்த முயன்றவர்களை சிசிடிவி கேமரா மூலம் போலீஸார் தேடி வருகின்றனர். தன்னை கடத்த வந்தவர்களை சிறுமி அடித்து விரட்டிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications