நீரில் மூழ்கி பலியாவதை தடுக்க சிறப்பு திட்டம்.. யோகியின் மெகா பிளான்.. எப்படி செயல்படும் தெரியுமா?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் திருவிழா காலங்களில் நீர்நிலைகளில் மூழ்கி மக்கள் பலியாவதை குறைக்கும் வகையில் சிறப்பு திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வகுத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். அது என்ன? அந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்பட உள்ளது என்பதை வாங்க பார்க்கலாம்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. 2வது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். உத்தர பிரதேசத்தை பொறுத்தமட்டில் ஏராளமான ஆன்மிக இடங்கள் உள்ளன. அங்கு பக்தர்கள் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும்போது பலரும் அதில் குளிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வேளையில் சிலர் தண்ணீரில் சிக்கி பலியாகி வருகின்றனர். இந்நிலையில் தான் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.
இதற்காக உத்தர பிரதேச அரசு திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு ‛முதல் அமைச்சர் பால் ரன்வீர் யோஜனா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் என்பது மாநிலத்தில் தண்ணீரில் மூழ்கி பலியாகும் நபர்களின் எண்ணிக்கையை 20 சதவீதம் அளவுக்கு குறைப்பதாகும்.

இந்த திட்டம் என்பது உத்தர பிரதேச மாநில பேரிடர் மற்றும் நிவாரண துறையின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதாவது நீரில் மூழ்கி பொதுமக்கள் இறப்பதை தடுப்பதற்கு தேவையான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் என்டிஆர்எப், எஸ்டிஆர்எப் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் பயிற்சி பெறும் வீரர்கள் 120 ‛ஆபடா மித்ராக்கள்' எனும் குழுவாக உருவாக்கப்பட உள்ளனர். அதன்பிறகு இவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்கள் மற்றும் திருவிழா காலங்களில் நீர்நிலைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இதுதவிர வெள்ளம் அதிகம் இருக்கும் பகுதிகளில் மக்களை நெருங்க விடுாமல் தடுப்பது, எச்சரிக்கை பலகை வைப்பது, சுழற்சி முறையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் பணியையும் இவர்கள் மேற்கொள்வார்கள். இதன்மூலம் மாநிலத்தில் தண்ணீரில் மூழ்கி பலியாகும் நபர்களின் எண்ணிக்கை என்பது கணிசமாக குறையும் என பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண துறையின் கமிஷனர் ஜிஎஸ் நவீன் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications