அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வருகிறாரா நித்யானந்தா? கைது செய்ய போலீஸ் திட்டமா? பரபரப்பு
லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் இன்று அந்த நிகழ்வுக்கு நித்யானந்தா வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமர் பிறந்ததாக கூறப்படும் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டது. இந்த கோயிலுக்கு மூன்று தளங்களில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.

இதனால் அயோத்தியே விழாக் கோலம் பூண்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் நிகழ்வுக்கு பாஸ் இருப்பவர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த விழாவுக்கு மடாதிபதிகள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவும் கலந்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.
அயோத்தியில் நடக்கும் குடமுழுக்கு நிகழ்வுக்கு தனக்கு அழைப்பு வந்ததாகவும் அதனால் அவர் கலந்து கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக நித்யானந்தா அறியப்படுகிறது. இவர் மீது பெங்களூரில் பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுவிடுவோமோ என அஞ்சி அவர் தலைமறைவாக உள்ளார்.
கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அதற்கான பாஸ்போர்ட், விமான சேவை, கரன்சி, கொடி உள்ளிட்டவற்றை நித்யானந்தா அறிமுகப்படுத்தினார். அவரை பெங்களூர் போலீஸார் தேடி வருகிறார்கள். அண்மையில் கூட அவர் உடல்நலம் குன்றியவராகவும் இருந்தால், தன்னால் அரை இட்லி கூட சாப்பிட முடியவில்லை என பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
நித்யானந்தாவை இன்டர்போல் போலீஸும் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த வரலாற்று மற்றும் அசாதாரண நிகழ்வைத் தவறவிடாதீர்கள்! அயோத்தி கோயிலில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுகிறார். இது உலகம் முழுவதையும் அலங்கரிக்கும் ஒரு நிகழ்வாகும். முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்து மதத்தின் உயர் மதத் தலைவர் (நித்தியானந்தாவை அவரது ஆதரவாளர்கள் அப்படி தான் அழைப்பார்கள்) பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் இந்த மாபெரும் நிகழ்வில் கலந்துகொள்வார்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவித்தபடியே நித்யானந்தா , அயோத்திக்கு வருகிறாரா, அப்படியே வந்தால் அவர் கைது செய்யப்படும் சூழல் இருக்கிறது. இதனால் உண்மையில் அவர் வருவாரா இல்லை கைதுக்கு அஞ்சி வராமல் இருந்துவிடுவாரா, என்பது கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications