10 வயது ஞானக்குழந்தை.. சூரிய நாராயணனுக்கு இறையருள் செல்வன் விருது.. பாராட்டிய ஆர்.பி. உதயகுமார்
மதுரை: யார் வேண்டுமானாலும் பாடலாம். அதை முகபாவனை உடன் பாடுவதற்கு தெய்வ கடாட்சம் வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறினார். சென்னையைச் சேர்ந்த 10 வயது ஞானகுழந்தை சூரிய நாராயணனுக்கு 'இறையருள் செல்வன்' விருதினை மதுரையில் நடைபெற்ற விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி பாராட்டினார்.
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, 'மதுரை அனுஷத்தின் அனுகிரகம்' அமைப்பு சார்பில் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு மற்றும் சென்னையைச் சேர்ந்த ஞானக்குழந்தை சூரிய நாராயணனின் கர்நாடகா இசை கச்சேரி மற்றும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

எஸ் எஸ் காலனி எஸ் எம் கே கல்யாண மண்டபத்தில் நடந்த தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில், 'அறம் பிறந்தது', 'யோகமும் போகமும்', 'நம்பிக்கை நாயகன்', 'எல்லோரும் மன்னர்' ஆகிய தலைப்புகளில் நான்கு நாட்கள் 'இலக்கிய மேகம்' ந.ஸ்ரீனிவாசன் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு உரையாற்றினார்.
ஐந்தாம் நாள் நிகழ்வாக கர்நாடக இசை கச்சேரி, மதுரை காமராஜர் சாலை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்றது. டாக்டர். கண்டதேவி விஜயராகவன் வயலின், கும்பகோணம் டாக்டர். சரவணன் மிருதங்கம், புதுக்கோட்டை சுரேஷ் கடம் வாசிக்க, சூரிய நாராயணனின் கர்நாடக இசை கச்சேரி சிறப்புற அரங்கேறியது.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயக்குமார், மதுரை ராம்சந்திரா கண் மருத்துவமனை சேர்மன் டாக்டர். சீனிவாசன், சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், டாக்டர் சரவணன் மற்றும் தொழிலதிபர் சூரஜ் சுந்தரசங்கர், ஆடிட்டர் சேதுமாதவா, 'அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட்' செயலாளர் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் சூர்ய நாராயணனைப் பாராட்டி, 'இறையருள் செல்வன்' விருது வழங்கி பேசிய ஆர்.பி.உதயக்குமார், "இசைக்கு இருக்கும் வலிமை மிகப் பெரியது. இசைக்கு மயங்காதவர்கள் உலகில் யாரும் கிடையாது. விளையாட பயிற்சி எடுத்தால் வந்துவிடும். பேசுவதற்கு பயிற்சி எடுத்தால் வந்துவிடும். ஆனால், குழந்தை பாடுவதற்கு தெய்வ அருள் வேண்டும்.

யார் வேண்டுமானாலும் பாடலாம். அதை முகபாவனை உடன் பாடுவதற்கு தெய்வ கடாட்சம் வேண்டும். அது இந்த சிறுவனுக்கு கிடைத்து இருக்கிறது. அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கர்நாடக இசையை ஆன்மிகத்தில் ரசிக்கும்படி பத்து வயதினிலே இந்த சிறுவன் பாடி இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த அரங்கில் கூடியுள்ள கூட்டம் சேர்த்த கூட்டம் இல்லை. தாமாக சேர்ந்த கூட்டம்! சிறுவனின் குரல் விரைவில் பெரிய திரையில் ஒலிக்க வேண்டும்.
இந்தக் காலத்தில் பேச நேரமில்லை, பார்க்க நேரமில்லை, செல்போனையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு செல்போனில் மூழ்கி உள்ள நிலையில் இது போன்ற கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்தி வரும் நெல்லை பாலுவையும் பாராட்டுகிறேன். தெய்வ கடாட்சம் பொருந்திய அந்த குழந்தைக்கு இறைவன் எல்லா செல்வங்களையும் அருள பாராட்டுகிறேன் என்று ஆர்.பி உதயகுமார் பேசினார்.












Click it and Unblock the Notifications