மதுரை, தூத்துக்குடி, உட்பட தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது
மதுரை: மதுரை, தூத்துக்குடி, உளுந்தூர்பேட்டை, திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு அதாவது செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது. இந்த உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு 2 பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் வருடந்தோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.

20 சுங்கச்சாவடிகள்: அதன்படி, இந்த வருடம் 2023ம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள 20 சுங்கச்சாவடிகளில், நாளை முதல் அதாவது இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது.. திண்டுக்கல், திருச்சி,சேலம் ,மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை - அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வு 1ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது..
அதனடிப்படையில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர பழைய கட்டணம் 85 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும், 2 முறை சென்று வர 125 ரூபாயிலிருந்து 135 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூபாய் 2505ல் இருந்து 2740 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிரடி உயர்வு: இலகு ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 220 ரூபாயிலிருந்து 240 ஆகவும் மாதாந்திர கட்டணம் 4385 ரூபாயிலிருந்து 4,800 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்று வர கட்டணம் ரூபாய் 290 லிருந்து 320 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 440 லிருந்து 480 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூபாய் 8770 லிருந்து 9595 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் 2 அச்சு மிக கனரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர ரூபாய் 470 லிருந்து 515 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 முறை சென்று வர கட்டணம் 705 ரூபாயிலிருந்து 770 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது மாதாந்திர கட்டணமாக 14095 ரூபாயிலிருந்து 15420 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பாஸ் டேக் வாகனங்கள்: மேலும், ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் 5 ரூபாயில் இருந்து 45 ரூபாய் வரையும், 2 முறை பயண கட்டணம் 10 ரூபாயிலிருந்து 65 ரூபாய் வரையும், மாதாந்திர கட்டணம் 235 ரூபாயிலிருந்து 1325 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது இந்த கட்டண நிர்ணயம் அனைத்தும் பாஸ் டேக் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பாஸ் டேக் இல்லாத வாகனங்கள் டபுள் மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் டோல்கேட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வானது வாகன ஓட்டிகளுக்கு அதிருப்தியை தந்துவருகிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வால், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், சுங்கக்கட்டணத்தையும் உயர்த்தினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்குமே, இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்களே? என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோரிக்கை: அதுமட்டுமல்ல, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமலும், தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்காமலும் சுங்க கட்டணத்தை மட்டும் உயர்த்துவது எந்த வகையில் நியாயம்? என்று கேட்பதுடன், உடனடியாக இந்த கட்டண உயர்வை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications