அலறிய மதுரை.. 30 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்.. பல கோடி மதிப்பாம்! சிக்கியது எப்படி?
மதுரை: மதுரையில் 30 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சிலமன் பிரகாஷ் என்பவரிடம் இருந்து 30 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மதுரை ரயில் நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த ஒருவர் போதைப்பொருட்களுடன் வருவதாக நுண்ணறிவுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, அதிகாரிகள் மதுரையில் சோதனை நடத்தியதில், சிலமன் பிரகாஷ் என்பவரிடம் இருந்து 30 கிலோ மெத்தம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டுள்ளது.
30 கிலோ மெத்தம்பெட்டமைனினின் மதிப்பு பல கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மதுரையில் இன்று ஒரே ஒரு நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருளை கொண்டு வந்த சென்னையைச் சேர்ந்த சிலமன் பிரகாஷிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் யார், எங்கிருந்து போதைப் பொருட்களை வாங்கி வருகிறார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைனின் (Methamphetamine) ஒரு உயர் ரக போதை பொருள். மெத்தம்பெட்டமைன் மூளை நரம்புகளை தூண்டி உற்சாகமான மனநிலையை கொடுக்கும். அதேவேளையில் மத்திய நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும் ஒரு சக்திவாய்ந்த போதைப்பொருள்.
வெள்ளை நிறத்தில் மணம் அற்றதாக இருக்கும் இந்த போதைப்பொருள் கல்லூரி மாணவர்கள் இடையே புழக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பசியின்மையை ஏற்படுத்தும் திறன் கொண்டது. மெத்தம்பெட்டமைன் தண்ணீர், ஆல்கஹாலில் எளிதில் கரையும். இதனால் பல நாடுகளில் இது போதைப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்று பிடிபட்டது. அவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை தமிழ்நாட்டிற்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், ஒரே நபரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் மதுரையில் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications