குவார்ட்டருடன் வாட்டர் மிக்ஸ் செய்யாதீங்க.. இதுக்கு பேசாம பச்ச தண்ணியவே குடிக்கலாமே பாஸ்!
மதுரை: மதுரையில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் ஏற்றி செல்லும் சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்களின் சீலை லாவகமாக திறந்து மதுவை திருடிவிட்டு தண்ணீர் கலந்து வைத்த 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
மதுரை சுற்று வட்டார பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படும் மதுபாட்டில்களில் லேபிள்கள் சரியாக ஒட்டப்படவில்லை என்றும் போலி மதுபானங்கள் விற்பனைக்கு வருவதாகவும் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீஸார் மது பாட்டில்களை குடோன்களில் இருந்து ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணித்து வந்தனர்.

மதுரையில் சரக்கு லாரி
மதுரை கல்மேடு, களஞ்சியம் நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த மது ஏற்றிச் சென்ற வாகனத்தின் அருகே சென்று பார்த்த போது, சிறிய ஊசி போன்ற கருவியால் சீலை அகற்றி பாட்டில் மூடியை கழற்றி கால்வாசி மதுவை வேறு பாட்டிலில் ஊற்றிவிட்டு, அதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றி நிரப்பி வைத்துக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.

டாஸ்மாக் கிடங்கு
விசாரணையில் அந்த சரக்கு வாகனம், மணலூர் டாஸ்மாக் கிடங்கிலிருந்து விரகனூர் டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்லும் மது பாட்டில்கள் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மதுரை ஆண்டார் கொட்டாரத்தை சேர்ந்த அஜய், ஜெயஹிந்த்ப்புரம் ஆனந்த், சதீஷ்குமார், டேவிட்துரை என்பது தெரியவந்தது.

தினமும் 20 முதல் 30 லிட்டர் மது திருட்டு
இவர்கள் தினமும் இது போன்று லோடு ஏற்றி வந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வேனை நிறுத்தி மது பானங்களைத் திருடியதும் தெரியவந்தது. தினமும் 20 லிட்டர் முதல் 30 லிட்டர் வரை மதுவை திருடி வீட்டிற்கு கொண்டு சென்று வேறு பாட்டில்களில் நிரப்பி இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸார் விசாரணை
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸார் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அது போல் வேறு எங்கெல்லாம் இவர்கள் கைவரிசையை காட்டியுள்ளார்கள் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே சில டாஸ்மாக் கடைகளில் மதுவுக்கு கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதில் இவ்வாறு தண்ணீரை கலந்து விற்பனை செய்வது குடிகாரர்களை அதிர்ச்சி அடைய செய்கிறது.












Click it and Unblock the Notifications