மதுரைக்கு வந்த அழகர்.. பெரியார் சிலை மீது ஏறி பக்தர்கள் தரிசனம்! திருவிழாவில் அரங்கேறிய சுவாரசியம்!
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக மதுரைக்கு வந்தடைந்தார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் பெண்கள் குழந்தைகள் பெரியார் சிலை மீது ஏறி நின்று அழகரை தரிசித்தனர். பத்திரமா இருங்க என பெரியார் கூறியிருப்பார் என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மதுரை என்றாலே திருவிழா தான். அதுவும் மதுரை சித்திரை திருவிழா என்றால் சொல்லவே தேவையில்லை. ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே இரண்டாவது வாரம் வரை சித்திரை திருவிழாவின் கொண்டாட்டங்களை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.
இந்த ஆண்டு, ஏப்ரல் 29 - சித்திரை திருவிழா கொடியேற்றமும், மே 06 - மீனாட்சி பட்டாபிஷேகமும் மே 08 - மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து மே 09 - மீனாட்சி திருத்தேரோட்டம், மே 10 - கள்ளழகர் புறப்பாடு நடைபெற்றது.

அந்த வகையில் மீனாட்சி திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தேறிய நிலையில் மீனாட்சி பார்ப்பதற்காக அழகர் மதுரைக்கு வருவார் அப்போது மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக வைகை ஆற்றில் எழுந்தருள்வது வழக்கம். இன்று அந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கும் நிலையில், அதற்காக நேற்று மதுரைக்கு வந்தடைந்தார் அழகர்.
ஆயிரக்கணக்கான பக்தர் வெள்ளத்துக்கிடையே பல்லக்கில் பவனி வந்த அழகரை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் வரவேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை அடுத்து பெண்கள் குழந்தைகள் அழகரை தரிசிக்க முடியாமல் அவதி அடைந்த நிலையில் ஒரு சிலர் அங்கிருந்த பெரியார் சிலை மீது ஏறி நின்று அழகரை தரிசித்தனர்.

கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர் பெரியார் என்றாலும் அழகரை பார்ப்பதற்காக அவரது சிலைக்கு அருகே நின்று அழகரை தரிசித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. ஒரு சிலர்," அவர் உயிரோடு இருந்திருந்தால் கூட பாத்து பத்திரமா விழுந்துறாமா பாருங்க... எல்லாருக்கும் சம வாய்ப்பு கிடைக்கனும் பார்க்காதவங்க முதலில் பாருங்கனு சொல்லிருப்பாரு" என கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications