"விஜய் அரசியலுக்கு வந்த பின் திருமாவளவன் எண்ண ஓட்டத்தில் குழப்பம்”.. அட்டாக் மோடில் அண்ணாமலை
மதுரை: "விஜய் அரசியலுக்கு வந்த பின் விசிக தலைவர் திருமாவளவனின் எண்ண ஓட்டத்தில் குழப்பம் இருக்கிறது. தவறு செய்த பின் தப்பிக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக, அண்ணாமலை என பழிபோட்டுக் கொண்டிருக்கிறார். திருமாவளவனின் அரசியல் தரம் தாழ்ந்து மாறியிருக்கிறது." என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, "விஜய் அரசியலுக்கு வந்த பின் திருமாவளவனின் எண்ண ஓட்டம் குழப்பத்தில் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக எனக் கூறும் திருமாவளவனின் அரசியல் தரம் தாழ்ந்து மாறியிருக்கிறது. தவறு செய்த பின் தப்பிக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக, அண்ணாமலை என பழிபோடுவதை நிறுத்த வேண்டும்.

திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சித்தாந்தத்தை விட்டு கூட்டணி சேரலாம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலை கண்டிக்கும் விசிக, வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்துகிறது. பார்த்து முறைத்ததால் நாலு தட்டு தட்ட வேண்டும் என திருமாவளவன் பேசுகிறார். பாகிஸ்தான் பார்டருக்கு திருமாவளவனை அனுப்ப வேண்டும்.
அவர் கார் மீதான தாக்குதலுக்கு நான் காரணம் என திருமாவளவன் கூறுகிறார். சம்பவத்திற்கு காரணமானோரை கைது செய்த பின் திருமாவளவன் அரசியலை விட்டு விலகுவாரா? இதுதான் தமிழகத்திற்கான சாபக்கேடு. சாதிகளுக்கு எதிரி எனக் கூறிக்கொண்டு சாதிப் பெயரில் அரசியல் செய்கிறது திமுக. இப்படிப்பட்ட தலைவர்கள் அரசியல் செய்கிறார்கள்." என்றார்.
மேலும் பேசிய அண்ணாமலை, "இந்திய மருந்தியல் ஆணையம் நடத்திய பயிற்சி வகுப்பில் தமிழக Drug Controller கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் இதற்கான உரிய காரணத்தை விளக்க வேண்டும். காஞ்சிபுரம் இருமல் மருந்து விவகாரத்தில் ஆய்வாளர்கள் 2 பேர் மட்டுமே கண் துடைப்புக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேல் மட்டத்தில் இருந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இருமல் மருந்து விவகாரத்தில் பதிலளிக்க முதல்வருக்கு பொறுப்பு உண்டு" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அண்ணாமலை பற்றி பேசியிருந்த விசிக தலைவர் திருமாவளவன், "இல்லாத, பொல்லாத கட்டுக்கதைகளை பேசுவதும், கற்பனையாக பேசுவதும் அண்ணாமலைக்கு வாடிக்கையாக உள்ளது. சமூக பதட்டத்தை உருவாக்கவே அவர் குறியாக இருக்கிறார். விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்பட போகின்றது? என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சென்னையில் என்னுடைய கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறி சில தவறான கருத்து பரப்பப்படுகிறது. அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக முந்திக்கொண்டு கருத்து கூறி பதட்டத்தை ஏற்படுத்த பார்க்கிறார். பைக் மீது எனது கார் மோதியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கும், அண்ணாமலைக்கும் ஏதோ தொடர்பு உள்ளது.
அண்ணாமலைக்கு மட்டும் உடனடியாக செய்தி எப்படி தெரிகிறது? இதற்கு பின்னால் பாஜக உள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த விஷயத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக, சாதி அமைப்புகள் இறங்கி வேலை செய்கிறார்கள். ஒரு சமூக பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக, தனியார் தொலைக்காட்சி தவறான செய்தி வெளியிட்டு அண்ணாமலைக்கு உதவி செய்கிறது." எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications