மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம்.. சுவைத்து பார்த்து ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!
மதுரை: தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டியை சுவைத்து பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளையொட்டி, மதுரையில் நெல்பேட்டை பகுதியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், எம்பி-க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து நெல்பேட்டை பகுதியில் உள்ள காலைச் சிற்றுண்டித் திட்டத்திற்கான நவீன சமையல் கூடத்தைப் பாா்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கான காலை உணவை சுவைத்து ஆய்வு செய்தார். அப்போது சமையல் கூடம் சுகாதாரமாக இருக்கிறதா, சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கான சிற்றுண்டியை சமையல் கலைஞர் வழங்க, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுவைத்து பார்த்து பாராட்டினார். இதனைத்தொடர்ந்து சமையல் கூடத்தில் இருந்து மாணவர்களுக்கு சிற்றுண்டி கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சிற்றுண்டிகள் கொண்டு சென்ற வாகனங்களை திறந்து பார்வையிட்டார். அடுத்ததாக சிம்மக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக பயணிக்கிறார்.












Click it and Unblock the Notifications