8 மாதங்களில் 8 தளங்கள்.. பிரம்மாண்டமாக உருவாகும் கலைஞர் நூலகம்! மதுரைக்கு முதல்வர் திடீர் விசிட்!
மதுரை : மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை முதன்முறையாக நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி கட்டிட பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட உள்ளது.

கலைஞர் நூலகம்
கட்டிடத்திற்கு 99 கோடி ரூபாயும், புத்தகம் வாங்க 10 கோடி ரூபாயும், கணினி வாங்க 5 கோடி ரூபாயும் என மொத்தம் 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அடித்தளத்தில் வாகன நிறுத்தத்துமிடமும்; தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவையும்; முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை பல்வேறு வகையான நூல்களுக்கான பிரிவுகளும் அமையவுள்ளன.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நூலகத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2021 அக்டோபர் 29ம் தேதி நேரில் பார்வையிட்டிருந்தார். கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக 2022 ஜனவரி 11ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அடுத்தடுத்து ஆய்வுகள் செய்து கட்டுமான பணிகளை முடுக்கி விட்டிருந்த நிலையில் தற்போது 80% பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
நேரில் ஆய்வு
இடம் தேர்வு செய்யப்பட்ட போது நேரில் பார்வையிட்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், கட்டுமான பணிகளை முதல் முறையாக இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை போல பிரம்மாண்டமாக அமையும் இந்த நூலகம் தென் தமிழகம் முழுமைக்கும் பயனுள்ள வகையில் அமையும்.

ஆகஸ்ட்டில் திறப்பு விழா
பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆய்வு மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் நபர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்டோருக்கு பேருதவியாக இருக்கும். இந்தியாவிலேயே முதன் முறையாக புதிய கட்டுமான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி 8 தள கட்டிடங்களை 8 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் ஒரே கட்டிடம் இது தான் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கினறனர். வரும் ஆகஸ்ட் 7ம் தேதி கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications