ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல்! எழுந்து நின்று அஞ்சலி செலுத்திய நிர்வாகிகள்!
மதுரை: மதுரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த விஜயகாந்த், ஆம்ஸ்ட்ராங், பங்காரு அடிகளார் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மதுரை திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் மதுரை சென்றடைந்தார். அதன்படி விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் இன்று திமுக பொதுக்குழு தொடங்கி உள்ள நிலையில் இந்த பொதுக்குழுவில் 33 தீர்மானங்கள் திமுக சார்பில் நிறைவேற்றப்பட உள்ளது. குறிப்பாக நிதி விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அணி உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
தமிழக ஆளுநரின் செயல்பாட்டுக்கு கடிதம் தெரிவித்து ஆளுநர் பதவியை நீக்க வலியுறுத்தி தீர்மானம்; துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தீர்மானம்; கட்சி அமைப்பு ரீதியாக முக்கியமான மாற்றங்களை மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதேபோல் சரியாக செயல்படாத நிர்வாகிகளுக்கு இக்கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்களை கட்சித் தலைவர் ஸ்டாலின் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தப் பொதுக்குழுவில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உள்ளிட்டோர் மறைவுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் கடந்த ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மதுரை திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரங்கல் தீர்மானங்களைத் தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications