மதுரையில் கலைஞர் நூலகத்துக்காக... பென்னி குவிக் வாழ்ந்த வீட்டை இடிக்காதீர்... ராமதாஸ் வேண்டுகோள்..!
மதுரை: மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகத்துக்காக பென்னி குவிக் வாழ்ந்த வீட்டை இடிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜூன் 3-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில் ஒன்று மதுரையில் பிரம்மாண்ட நூலகம்.
ரூ.70 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நவீன முறையில் உலகத் தரம் வாய்ந்த நூலகமாக இது விரைவில் அமையவுள்ளது. இதற்கான இடத்தேர்வு பணிகளும் கூட ஓரளவு நிறைவடைந்துவிட்டன.

இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்;
''மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பதற்காக, மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் வாழ்ந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வீட்டை இடிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.''
''கலைஞர் பெயரில் அறிவை வளர்க்கும் கருவியான நூலகத்தை அமைப்பது வரவேற்கத்தக்கது. அதற்காக பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடிப்பது முறையல்ல. பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் வசிப்பிடமாக உள்ள அந்த இல்லத்தை பென்னிகுவிக் நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும்.''
''மதுரை பாண்டி கோயில் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் அதிகமாக உள்ளன. அங்கு இப்போது திட்டமிடப்பட்டதை விட இன்னும் பிரம்மாண்டமாக நூலகம் அமைக்கலாம். அதற்காக நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.''இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications