பட்டா.. நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியிருக்கீங்களா.. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
மதுரை: நீர் நிலையை ஆக்கிரமித்து பட்டா கேட்பதை ஏற்க முடியாது. நீர் நிலைகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க வருவாய்த் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சென்னையில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு நீர் நிலை ஆக்கிரிமிப்பு எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். அதேநேரம் நீர்நிலை ஆக்கிரமிபுகள் மீது 2015ம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர் நிலை ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளி வருகிறது. மேலும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்குவதையும் அடியோடு நிறுத்தியது. சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே நீர் நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கப்படவில்லை.

இது ஒரு புறம் எனில், நீர் நிலை ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.. நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்தால், எத்தனை வருடங்கள் ஆனால் பட்டா வழங்கப்படுவது இல்லை. நீர்நிலை ஆக்கிமிரத்து கட்டப்பட்ட கட்டிடங்கள் வீடுகள் தொடர்ந்து அரசால் இடிக்கப்பட்டு வருகிறது. இப்படி ஆக்கிரிமிக்கப்பட்ட வீடுகள் அல்லது கட்டிடங்களை இடிப்பதற்கு எதிரான மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து வருகிறது.
இந்த சூழலில் மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் 'மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம்போக்கு இடத்தில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். தற்போது அரசு அதிகாரிகள் நாங்கள் குடியிருந்து வரும் பகுதி நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.பொதுப்பணித் துறையினரும் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கு தடை விதித்து எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும். என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், "மனுதாரர் புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா கேட்பதை ஏற்க முடியாது" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ''நீர் நிலையை ஆக்கிரமித்து பட்டா கேட்பதை ஏற்க முடியாது. நீர் நிலைகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க வருவாய்த் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இதனால் பட்டா கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசு ஆவணப்படி புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும் பலர் நீர் நிலைப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறையினரும், வருவாய் துறையினரும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் அந்த உத்தரவில் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications