நள்ளிரவில் பயங்கரம்.. மதுரை ரயில் நிலையம் அருகே மோசமான தீ விபத்து.. ஒருவர் பலி.. திக்திக் சம்பவம்
மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள மேல வெளி வீதியில் எல்.ஐ.சி அலுவலகம் இரண்டாவது மாடியில் திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையின் பிரதானப் பகுதியில் எல்ஐசி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள உள்ள மேல வெளி வீதியில் இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தான் சற்று நேரத்திற்கு முன்பு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். தீயை அணைக்கும் பணிகளில் அவர்கள் இறங்கினர். மேலும், 5க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்த அலுவலகத்தில் இருந்த நிலையில், அவர்களுக்கு என்ன ஆகுமோ என்றும் அச்சம் ஏற்பட்டது.

துரிதமாகச் செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அந்தப் பெண் மதுரை எல்லிஸ்நகரை சேர்ந்த 55 வயதான கல்யாணி நம்பி என்பதும் அவர் அங்கு முதுநிலை மேலாளராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. அவரது உடல் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல மற்றொரு ஊழியரும் தீ காயங்களுடன் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. உள்ளே வேறு யாராவது இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.
தீவிபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரையின் பிரதானப் பகுதியில் இரவு நேரம் திடீரென ஏற்பட்ட இந்தத் தீவிபத்து பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications