பொன். மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு.. “தினமும் போய் கையெழுத்து போடுங்க”.. ஐகோர்ட் கிளை அதிரடி ஆணை
மதுரை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் கோரிக்கையை ஐகோர்ட் மதுரை கிளை நிராகரித்துள்ளது. சிபிஐ அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார். 4 வாரம் இன்னும் முழுமை அடையாததால் தற்போது நிபந்தனையை தளர்த்த முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக பொன். மாணிக்கவேல் பணியில் இருந்த காலகட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த 2008 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே வீடு கட்ட அஸ்திவாரம் அமைக்கும் பணியின்போது 6 சிலைகள் கிடைத்தன. இந்த சிலைகளைக் கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காதர்பாட்ஷா, சுப்பராஜ் ஆகியோர் சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தீனதயாளனின் உதவியோடு, சிலைகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிலையைக் கடத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான டிஎஸ்பி காதர் பாட்ஷா, கோயம்பேடு சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாக 2017 ஆம் ஆண்டு ஜூன் 29 -ஆம் தேதி காதர் பாட்ஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின், நெல்லையில் பழம்பெரும் கோயில் சிலைகள் விற்கப்பட்ட சம்பவத்தில் டி.எஸ்.பி காதர் பாட்ஷாவுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு அவர் மீண்டும் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்தததாக கூறி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக, சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யக் கோரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி, பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க கடந்த ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கிட்டதட்ட ஏழரை மணிநேரம் விசாரணை நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து சிலை தடுப்பு பிரிவு காவல்துறை முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, பொன். மாணிக்கவேலுக்கு கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார். பொன்.மாணிக்கவேல் 4 வாரங்களுக்குச் சென்னையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் தினமும் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி பொன். மாணிக்கவேல் சி.பி.ஐ அலுவலகத்தில் தினம்தோறும் ஆஜராகிக் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் பொன். மாணிக்கவேல் சிபிஐ அலுவலகத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்து இடுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, கடந்த 15 நாட்களாகத் தான் பொன். மாணிக்கவேல் சிபிஐ அலுவலகத்தில் தினம்தோறும் ஆஜராகிக் கையெழுத்திட்டு வருகிறார். ஆனால் நீதிமன்ற நிபந்தனையின்படி 4 வாரங்களுக்கு ஆஜராகிக் கையெழுத்திட வேண்டி உள்ளதால், மீதம் உள்ள இரண்டு வாரங்களுக்கு அவர் கையெழுத்திட வேண்டும் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications