நியோமேக்ஸ் முறைகேடு.. ரூ.78 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க நடவடிக்கை: கோர்ட்டில் தமிழக அரசு தகவல்!
மதுரை: நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை முடக்கி அரசிதழில் வெளியிட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தர உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணன், கபில் ஆகியோர் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில், நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் கண்டறியப்பட்ட சொத்துகளை முடக்கி அரசிதழில் வெளியிடப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு முழுவதும் நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. இந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும், இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக தரப்படும் எனக் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை ஈர்த்தனர். இதை நம்பி பலர் பல கோடிக்கு முதலீடுகளை செய்துள்ளனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ள கமலக்கண்ணன், வீரசக்தி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளனர். நியோமேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணன், கபில் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி, ரவிசங்கர், ராஜ்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் நம்பி செல்வன், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் சுமார் 51 லட்ச சதுர அடி நிலம் மற்றும் 78 கோடி மதிப்புள்ள சொத்துகள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் இந்த சொத்துக்களை முடக்கி, அரசிதழில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை முடக்கி அரசிதழில் வெளியிடப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications