முதல்வரை சந்திக்கும் எண்ணமில்லை.. அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் அதிரடி
மதுரை: அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து பேசும் எண்ணம் தனக்கு இல்லை என மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் நேற்று இரவு அதிரடியாக நீக்கப்பட்டார்.
முதல்வர் பழனிச்சாமியின் பரிந்துரையை ஏற்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை நீக்கி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கேபிள் டிவி கார்ப்பரேசன் தலைவரும் அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நேற்று பதவி நீக்கத்தின்போது ராமநாதபுரத்தில் இருந்த மணிகண்டன், உடனடியாக நேற்று இரவே மதுரைக்கு வந்து தங்கினார்.
இன்று காலை அவர் சென்னை செல்வதற்காக வீட்டில் இருந்து மதுரை விமான நிலையம் கிளம்பினார். . அப்போது செய்திகாளர்கள் " உங்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசுவீர்களா?" என்று கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கும் எண்ணம் இல்லை என்றார். இதனிடையே சென்னையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார் என கூறப்படுகிறது.