ஓபிஎஸ் 6 மாதம் அமைதியாக இருந்தால்.. நாங்களே எடப்பாடி பழனிசாமியிடம் பேசுகிறோம்.. ராஜன் செல்லப்பா!
மதுரை: மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் இணைய வேண்டும் என்றால், 6 மாதங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா நிபந்தனை விதித்துள்ளார். வழக்கு தொடர்வது போன்ற எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் இருந்தால், எடப்பாடி பழனிசாமியிடம் நாங்களே பேசி நடவடிக்கை எடுக்க சொல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருப்பதால், தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகிறது. அண்மையில் கோவை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.

இருந்தாலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூறுவதையே செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார். இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுகவில் எந்த நிபந்தனையும் இன்றி இணையத் தயார் என்று திடீரென அறிவித்தார். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே நோக்கம் என்றும் கூறி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அதிமுக கடந்த 10 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியையே சந்தித்துள்ளது. குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசுகையில், ஒற்றைத் தலைமை ஏற்ற பின் அதிமுக என்ன வெற்றியை கண்டது என்று கேட்கிறார்கள். இரட்டை தலைமை இருந்த போதும் என்ன வெற்றியை கண்டோம். ஒரு அவல நிலை ஏற்பட்டதால், ஒற்றை தலைமைக்கு மெல்ல மெல்ல அடியெடுத்து சென்றோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்தான் அதிமுகவின் இலக்கு.
அமித் ஷா உள்ளிட்டோர் ஓபிஎஸ்-க்கு ஆளுநர் பதவி கொடுக்கிறோம் என்று கூட சொல்லி இருப்பார்கள். அதற்கான வாய்ப்பு அவருக்கு இருக்கிறது. ஆனால் அதிமுக என்ற இயக்கம் வளர்ச்சியை நோக்கி செல்லும் போது, எந்த இடையூறும் செய்யாதீர்கள். உண்மையில் அதிமுகவில் இணைய வேண்டும் என்று நினைத்தால், ரகசியமாக சொல்லிவிடலாம். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
எதற்காக ஓபிஎஸ் அண்ணன் பத்திரிகையாளர்களிடம் இதனை சொல்ல வேண்டும்? இதற்கு முன்பும் தனியாக சென்றீர்கள் தானே.. பின் மீண்டும் இணைந்த போது துணை முதலமைச்சர், ஒருங்கிணைப்பாளர் பதவி அளிக்கப்பட்டது. இதனால் ரகசியமாகவே சொல்லி இருக்கலாம். அதிமுகவில் இணைய வேண்டும் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய தேவையே கிடையாது.
தர்மம் வெல்லும், சூது வெல்லும் என்று சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் அதிமுகவில் இணைய வேண்டும் என்கிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொள்கிறேன் என்று வெளிப்படையாக கூறலாமே.. எந்த நிபந்தனையும் தேவையில்லை. அதிமுக வளர்ச்சி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நீதிமன்றம் செல்ல கூடாது. ஒரு 6 மாதம் அமைதியாக இருந்தால், நாங்களே எடப்பாடி பழனிசாமியிடம் பேசுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications