மதுரை விமான நிலைய விவகாரம்.. மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்! ஸ்டாலினுக்கு போன டிமாண்ட்
மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முன் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும். மேலும் அறவழியில் போராடும் மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரசப் பயங்கரவாதம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தை சுற்றிய சின்ன உடைப்பு பகுதியில் சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள், வீடுகள், மயானம் உள்ளிட்ட இடங்களை கையகப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் தான் இடத்தை வழங்கும் மக்களுக்கு மதுரை மாநகராட்சி பகுதியில் 3 சென்ட் நிலத்தில் வீடு வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மக்கள் கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கை என்பது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இருப்பினும் அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தும் செயலில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய போராட்டத்தில் பல பெண்கள் மயங்கினர். இந்நிலையில் தான் மக்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மதுரை வானூர்தி நிலைய விரிவாக்கத்திற்காக அருகிலுள்ள சின்ன உடைப்பு கிராமத்திலிருந்து மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி வலுகட்டாயமாக நிலங்களை அபகரிக்கும் திமுக அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. மதுரை நகருக்குள்ளேயே மீள் குடியேற்றம் செய்ய வேண்டும், 3 சென்ட் நிலம் தரவேண்டும், இடிக்கும் வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற அம்மக்களின் மிக நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றித்தராமல், திமுக அரசு வலுக்கட்டாயமாக நிலங்களைப் பறிப்பதென்பது கொடுங்கோன்மையாகும்.
சின்ன உடைப்பு கிராம மக்கள் வானூர்தி நிலைய விரிவாக்கத்திற்கு நிலங்களைத் தர முடியாது என்று கூறவில்லையே? தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றுதானே போராடுகின்றனர். அதைக்கூட திமுக அரசால் நிறைவேற்றித்தர முடியாதா?
மக்களின் நியாயமான தொடர் கோரிக்கையினை மதிக்காமல் மதுரை வானூர்தி நிலைய விரிவாக்க ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியதைக் கண்டித்து அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் அடிப்படையில் அறவழியில் போராடும் சின்ன உடைப்பு கிராம மக்கள் மீது வழக்குப் பதிவு, கைது நடவடிக்கை என்று அடக்குமுறைகளை ஏவி, அச்சுறுத்துவது அப்பட்டமான எதேச்சதிகாரமாகும்.
மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரான அழிவுத் திட்டங்களை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் 'எல்லார்க்கும் எல்லாம்' கிடைக்கச் செய்கின்ற சமூக நீதியா?
நிலங்களை வழங்க மறுக்கும் மக்களை மிரட்டி அச்சுறுத்துவதும், வெளியில் வரமுடியாதபடி திமுக அரசு காவல்துறையைக் கொண்டு அடைத்து வைப்பதும், சிறிதும் மனச்சான்று இன்றி கைது செய்து சிறைப்படுத்த முனைவதும் நியாயம்தானா? பரந்தூர் மக்கள் மீது இதேபோன்ற அடக்குமுறைகளை ஏவிவரும் திமுக அரசு, தற்போது மதுரை சின்ன உடைப்பு கிராம மக்களையும் அடக்கி ஒடுக்குவதென்பது அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும்.
எனவே, உடனடியாக காவல்துறையினரை அப்பகுதிகளில் இருந்து விலகச் செய்வதோடு உரிய நியாயங்களோடுப் போராடும் மதுரை சின்ன உடைப்பு கிராம மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டுமெனவும் இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications