அவதூறை ஆரம்பிச்சு வச்ச சரவணன் முடிச்சும் வச்சிட்டாரு.. RTI டேட்டாவை வெளியிட்டு சு.வெங்கடேசன் பதிலடி!
மதுரை: அதிமுக வேட்பாளர் சரவணன் வெளியிட்டுள்ள ஆர்.டி.ஐ ஆதாரங்கள் எமக்கான சாட்சியங்களே எனக் கூறியுள்ளார் மதுரை எம்.பியும் திமுக கூட்டணி வேட்பாளருமான சு.வெங்கடேசன்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. மதுரை லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிட்டிங் எம்.பி. சு.வெங்கடேசன், அதிமுக சார்பில் டாக்டர் சரவணன், பாஜக சார்பில் ராம சீனிவாசன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சத்தியதேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நான்கு முனைப் போட்டி நிலவும் மதுரை லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன், அதிமுக வேட்பாளர் சரவணன் ஆகிய இருவரும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சிட்டிங் எம்.பி சு.வெங்கடேசன், X தளத்தில் மட்டுமே ஆக்டிவ்வாக இருந்து வருவதாகவும், மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும் விமர்சித்து வருகிறார் அதிமுக வேட்பாளர் சரவணன்.
இதையடுத்து அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு பதில் அளித்தார் சு.வெங்கடேசன். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 17 கோடியில் 16 கோடியே 96 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 245 பணிகளைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்துள்ளோம். ஆனால் சரவணன் 5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக சொல்வது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் என சு.வெங்கடேசன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல்களை வெளியிட்டிருந்தார் டாக்டர் சரவணன். அதிமுக வேட்பாளர் சரவணன் வெளியிட்டுள்ள "RTI" ஆதாரங்கள் எமக்கான சாட்சியங்களே எனக் கூறியுள்ளார் சு.வெங்கடேசன்.
சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், "எமது தொகுதி மேம்பாட்டு நிதியில் 17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் 5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு ஆங்கில நாளிதழில் அதிமுக வேட்பாளர் சரவணன் தெரிவித்து இருந்தார். அதற்கு நான், 5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட 17 கோடிகளில் 245 திட்டங்களுக்கு 16.96 கோடி வரை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பதில் அளித்து இருந்தேன்.
அதற்கு விளக்கம் அளித்துள்ள சரவணன், ஒரு ஆர்.டி.ஐ பதிலை ஆதாரமாக வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த பதில் உண்மையில் அவருக்கான ஆதாரமாக இல்லை.
* அந்த பதிலிலேயே 260 திட்டங்கள் 16.60 கோடிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும், 228 திட்டங்கள் ரூ 15.26 கோடிகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது என்றும் 155 திட்டப் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது என்றும் அதே ஆர்.டி.ஐ தெரிவித்துள்ளது.
* அந்த ஆர்.டி.ஐ பதில் அக்டோபர் வரையிலான தகவல்களை மட்டுமே கொண்டுள்ளது. அதற்கு பிந்தைய 5 மாதங்களின் விவரம் அதில் இல்லை.
ஆகவே சரவணன் அவர்களே அவதூறை ஆரம்பித்து வைத்து அதை முடித்து வைத்தும் உள்ளார். ஆர்.டி.ஐ பதிலின் முழு விவரங்களை வெளியிடாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தது அவரின் பதிலிலேயே அம்பலமாகியுள்ளது.
சட்ட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்த பின்னர் சரவணன் இந்த ஆர்.டி.ஐ ஆவணத்தை வெளியிட்டுள்ளார். 5 கோடிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் உண்மை அல்ல என்பது அவர் வெளியிட்டுள்ள ஆவணம் மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது .
அநேகமாக அமலாக்க நிலையில் உள்ள எல்லா திட்டங்களிலும் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அனைத்துப் பணிகளும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. உண்மையை எவராலும் மறைக்க இயலாது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications