இரட்டை இலை சின்னத்துடன் கூடிய செங்கோல்! எடப்பாடி பழனிசாமிக்கு டைமிங்காக கிஃப்ட் தந்த டாக்டர் சரவணன்!
எடப்பாடி பழனிசாமிக்கு டைமிங்காக பரிசளித்த சரவணன்.
மதுரை: மதுரையில் ஆதரவாளர்களை அதிமுகவில் இணைக்கும் விழாவை நடத்தியுள்ள டாக்டர் சரவணன், எடப்பாடி பழனிசாமிக்கு டைமிங்காக கிஃப்ட் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
7 அடி உயரத்தில் இரட்டை இலை சின்னத்துடன் கூடிய தங்கமுலாம் பூசப்பட்ட செங்கோலை எடப்பாடி பழனிசாமிக்கு சரவணன் பரிசளித்திருக்கிறார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னத்தை போராடி பெற்ற உற்சாகத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இந்த செங்கோல் மேலும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவருமான மதுரையை சேர்ந்த சரவணன் அண்மையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதையடுத்து தனது ஆதரவாளர்களை அதிமுகவில் இணைப்பதற்கான நிகழ்ச்சியை மதுரையில் இன்று நடத்தி முடித்திருக்கிறார்.
இதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி திமுக அரசையும், அமைச்சர் செந்தில்பாலாஜியையும் மிக கடுமையாக விமர்சித்தார். சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்ற நிலை அதிமுகவில் மட்டுமே உள்ளதாக கூறி சரவணனையும் அவரது ஆதரவாளர்களையும் வரவேற்றார்.

சரவணன் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு செக் வைக்கும் விதமாக, அவர் ஏற்பாடு செய்த இணைப்பு விழாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்று மதுரை வந்து சென்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி வருகை தர மாலை 6 மணியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4.30 மணிக்கெல்லாம் விழா மேடைக்கு வந்துவிட்டார். நெல்லையில் திருமண விழாவை முடித்த கையுடன் மதுரையில் இணைப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு சாலை மார்க்கமாகவே சேலம் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்பதால் முன்கூட்டியே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications