ரொம்ப அப்செட்.. பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து விலகலா? நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்!
மதுரை: பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நயினார் நாகேந்திரன் விலகப் போவதாக பரவும் தகவல் குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். "பதவி விலகுவதற்கான அவசியம் எதுவும் இல்லை. என் மீது பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். உள்துறை அமைச்சர் எனது வீட்டுக்கு நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றார்." எனத் தெரிவித்துள்ளார் நயினார் நாகேந்திரன்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை டிடிவி தினகரன் சுமத்தினார்.

செங்கோட்டையன் விவகாரம்
இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று 10 நாட்கள் கெடு விதித்து, கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி பேசியிருந்தார். இதனால் கோபமடைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.
செங்கோட்டையன் ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளும் பறிக்கப்பட்டன. அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று செங்கோட்டையன் கூறிய நிலையில், அவர் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். டெல்லி புறப்படும் முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஹரித்வாருக்கு பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார் செங்கோட்டையன். ஆனால், அன்று இரவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் செங்கோட்டையன்.
நயினார் அப்செட்?
வழக்கமாக, டெல்லி பாஜக தலைவர்களைச் சந்திக்க தமிழகத்திலிருந்து யார் சென்றாலும், மாநிலத் தலைவரின் ஒப்புதலோடுதான் சந்திப்புகள் நடைபெறும். ஆனால், அமித் ஷாவை செங்கோட்டையன் சந்திக்கும் தகவலே நயினார் நாகேந்திரனுக்கு சொல்லப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அதிமுக தரப்பில் இருந்தும் அழுத்தம் வந்த நிலையில் நயினார் நாகேந்திரன் ஏகத்துக்கும் கடுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரன் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாகவும் தகவல்கள் பரவின.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முன்னாள் அமைச்சர் செய்கோட்டையன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது மிகவும் சாதாரணமானது. அதனை பெரிது படுத்த தேவையில்லை. மேலும் அவர்களின் சந்திப்பு தொடர்பாக எனக்கு முழுயைாக தெரியவில்லை. எனக்கு தெரிந்த பின்னர் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
கூட்டணியில் குழப்பம் இல்லையாம்
செங்கோட்டையன், அமித் ஷா சந்திப்பால் கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் இல்லை. கூட்டணி எப்போதும் போல இயல்பாகத் தான் இருக்கிறது. அதிமுக.வை உடைக்க வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்ற அவசியம் பாஜகவுக்கு கிடையாது. அதிமுக தற்போதும் பலமாகத் தான் இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் மக்கள் வெள்ளமாகத் திரண்டு வரவேற்பு தருவதால் திமுகவுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. எங்கள் கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். அவர் சொல்வது தான் இறுதியான முடிவு. கூட்டணிக்குள் மீண்டும் வருவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் என இருவரிடமும் பேசத் தயாராக இருக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
நான் பதவி விலக அவசியம் கிடையாது
மேலும் பேசிய நயினார் நாகேந்திரன், "பாஜக மேற்கொள்ளும் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐசியூ-வுக்கு செல்லும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார். 2026 தேர்தலுக்கு பின்னர் எந்தக் கட்சி ஐசியூ-வுக்கு செல்லும் என்பதை அனைவரும் பார்ப்பார்கள். நான் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக செய்திகள் பரவுகின்றன. நான் ஏன் பதவி விலக வேண்டும்? பிரதமர் மோடியும், நட்டாவும், அமித் ஷாவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். உள்துறை அமைச்சர் எனது வீட்டுக்கு நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றார். நான் பதவி விலக வேண்டிய அவசியம் கிடையாது. இனி இது போன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.
திமுக வலுவாக இருக்கிறது என்றோ, அவர்கள் 40 சதவீதம் வாக்கு வங்கி வைத்திருப்பதாகவோ அண்ணாமலை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இதுபோன்ற கருத்துகளை திமுகவினர் பரப்பி வருகின்றனர். அண்ணாமலை பேசியதை சிலர் திரித்து கூறுகின்றனர்" என்று தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்.












Click it and Unblock the Notifications