பணப்பட்டுவாடா நடக்குது.. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்துங்க... உயர்நீதிமன்றத்தில் மனு
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை ரத்து கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது.

இந்த 4 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைக்க ஆளும் அதிமுகவும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த திமுகவும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதேபோல் டிடிவி தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.
இதனிடையே திருப்பரங்குன்றம் தொகுதியில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அங்கு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் வலியுறுத்தி உள்ளார் .இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ரமேஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்தமனுவில் திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகரித்துள்ளதால் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. எனவே அங்கு தேர்தலை நிறுத்த வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications