ஓபிஎஸ் மகனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய எம்எல்ஏ.. என்ன காரணம்.. பரபரக்கும் அதிமுக
மதுரை: சோழவந்தான்(தனி) தொகுதி அதிமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான மாணிக்கம் வேட்புமனு தாக்கலுக்கு முன்பு, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
திடீரென ரவீந்திரநாத்தின் காலில் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் விழுந்ததை பார்த்து அங்கிருந்த அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் 48 எம்எல்ஏக்களை தவிர பலருக்கும் மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் சீட்
அப்படி சீட் பெற்றவர்களில் ஒருவர் தான் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மாணிக்கம். இவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பே பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

வாடிப்பட்டி தாலுகா ஆபிஸ்
இந்நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனுதாக்கல் செய்ய முடிவு செய்த மாணிக்கம் நேற்று வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வருகை தந்தார். அப்போது அவருடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகனான ஓ.பி. ரவீந்திரநாத் குமாரும் வந்தார்.

ஓபிஎஸ் மகனிடம் ஆசி
வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு வந்த பின்னர், வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்னர் ரவீந்திரநாத் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இந்த சம்பவத்தை அங்கிருந்த கட்சி சீனியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மாணிக்கம் சொத்து
அதன்பின்னர் மாணிக்கம் நேற்று மதியம் 1:35 மணிக்கு இரு வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக மகள் ஆதிராதீப்தி இரு மனு தாக்கல் செய்தார். கடந்த 2016 தேர்தலில் மாணிக்கம் மற்றும் குடும்பத்தாரின் அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு 17 கோடியே 31 லட்சத்து 28 ஆயிரத்து 763 ரூபாயாக இருந்தது. தற்போது 19 கோடி 84 லட்சத்து 47 ஆயிரத்து 530 ரூபாய் என்று வேட்பு மனுவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications