தவெக மாநாட்டில் துயரம்.. விஜய்யை பார்க்க மதுரை சென்ற நபர் மாரடைப்பால் மரணம்! கடும் வெயிலில் தொண்டர்கள் தவிப்பு
மதுரை: விஜய்யின் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் திரண்டனர். இதற்கிடையே இந்த மாநாட்டில் பங்கேற்கச் சென்ற ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டவுடன் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவின் இரண்டாவது மாநாடு இன்று மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடந்த தவெக சார்பில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. தவெக தொண்டர்கள் சிரமத்தைச் சந்திக்காமல் இருக்கப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதீத வெப்பம்
இன்று மாலை மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அதிகாலை முதலே மக்கள் திரள ஆரம்பித்தனர். கடும் வெயில் காரணமாகப் பொதுமக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். காலை 10 மணிக்கு மேல் வெயில் உச்சத்திற்குச் சென்றது. 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானதாகச் சொல்லப்படுகிறது. அதீத வெப்பத்தால் வெயிலில் நிற்கவே முடியாமல் மாநாட்டிற்கு வந்த மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர்.
நிழலான இடம் எதுவும் இல்லாததால் பலரும் கீழே போடப்பட்டிருந்த கிரீன் மேட்டை எடுத்து மேற்கூரை போலப் பயன்படுத்திக் கொண்டனர். இன்னும் சிலர் குழந்தைகளுடன் வந்திருந்தனர். குழந்தைகள் வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல் அழுக ஆரம்பித்தனர். அதிக கூட்டம் திரண்டதால் உடனடியாக வெளியேறவும் முடியவில்லை. பெரும் சிரமத்திற்கு நடுவில் தான் அவர்கள் குழந்தைகளுடன் வெளியேறினர்.
ஒருவர் மரணம்
இதற்கிடையே தவெக மாநாட்டிற்குச் சென்றவர் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் உயிரிழந்தார். மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து சென்ற அந்தத் தொண்டருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்தார்.
யார் அந்த நபர்?
உயிரிழந்த அந்த நபர் பிரபாகரன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் விஜய் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றபோது, சக்கிமங்கலம் அருகே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடன் சென்றவர்கள் அவரை உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அரசு மருத்துவமனையில் அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்தார்.
விஜய் மாநாடு
இன்றைய தினம் மாநாட்டில் வெயில் தான் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. மதுரையில் கடும் வெயில் காரணமாக தவெக மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பலரும் வெயில் தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல் மயங்கினர். அவர்களுக்கு அங்கேயே முதலுதவி மையம் ரெடியாக இருந்த நிலையில், சிகிச்சை தரப்பட்டது. பலரும் முதலுதவிக்குப் பிறகு ரெஸ்ட் எடுக்கச் சென்றனர். அதேநேரம் சிலருக்கு மேல்சிகிச்சை தேவைப்பட்டது.
இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வளையங்குளம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 9 பேர், மதுரை அரசு மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 10 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications