"மதுரை கிழக்கில் நான் போட்டியிடுகிறேன்.." விஜய் சொன்னவுடன் அதிர்ந்த கூட்டம்.. ஆனா கடைசியில் ட்விஸ்ட்
மதுரை: மதுரையில் நடைபெறும் தவெகவின் 2வது மாநாட்டில் பேசிய விஜய் அதிரடியாகப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக மதுரை கிழக்கில் நான் போட்டியிடுகிறேன் என்று விஜய் சொன்னவுடன் தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.. இருப்பினும், கடைசியில் எல்லாத் தொகுதியில் விஜய்தான் போட்டி, அப்படி நினைத்து வாக்களியுங்கள் என்று ட்விஸ்ட் கொடுத்தார்.
தவெகவின் இரண்டாவது மாநாடு இன்று மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக அதிகாலை முதலே மக்கள் திரள ஆரம்பித்தனர். இதனால் போலீசார் அறிவுறுத்தலின் பெயரில் மாநாடு முன்கூட்டியே ஆரம்பித்தது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், தமிழ்நாட்டில் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் மட்டுமே போட்டி என்பதை மீண்டும் கூறினார். மேலும் அவர் தனது பேச்சில் திமுக மற்றும் பாஜகவையும் விமர்சித்துப் பேசினார்.

மதுரை கிழக்கில் போட்டி
அப்போது ஒரு கட்டத்தில் இப்போது நான் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கப் போகிறேன் என்றதும் தொண்டர்கள் ஆர்வமாகினர். முதலில் மதுரை கிழக்கில் தான் போட்டியிட உள்ளதாக விஜய் கூறினார். இதைக் கேட்டவுடன் தொண்டர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். ஆனால், "இன்னும் இருக்கு.. இன்னும் இருக்கு" எனச் சொன்ன விஜய், மதுரை மேற்கிலும் நானே போட்டியிடுகிறேன் என்றார்.. ஓகே இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார் என இன்னும் அதிகச் சத்தம் எழுப்பினர்.
எல்லா தொகுதிகளிலும் "விஜய்"
ஆனால், தொடர்ந்து பேசிய விஜய், மதுரை வடக்கிலும் நான் தான் போட்டி என்றதும் தொண்டர்கள் குழம்பிவிட்டனர். பிறகு மதுரை தெற்கு தெற்கு, மேலூர் என எல்லாத் தொகுதிகளிலும் விஜய்தான் போட்டி என்று நினைத்து வாக்களிக்க வேண்டும் என்று விளக்கம் கொடுத்தார். மேலும் அவர், "தமிழ்நாடு முழுக்க நானே வேட்பாளர்.. 234 தொகுதியிலும் இந்த 'விஜய்' தான் வேட்பாளர் என்று நினைத்தே வாக்களியுங்கள். இந்த முகத்திற்காக வாக்களித்தால்.. உங்கள் வீட்டிலுள்ள உங்கள் வேட்பாளர் ஜெயித்தது போல" என்றார்.
விஜய் தனது பேச்சில் எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் குறித்தும் குறிப்பிட்டுப் பேசினார். முதல்வர் நாற்காலிக்காக எதிரிகளைக் கெஞ்ச வைத்தவர் 'எம்ஜிஆர் ' என்று புகழ்ந்து பேசினார். மேலும், விஜயகாந்த் உடன் பழகும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும் அந்த அற்புதமான மனிதர் கூட மதுரையைச் சேர்ந்தவர் தான் என்றார்.
மார்கெட் போன பிறகு வரவில்லை
மேலும், ரிடையர்ட் ஆகி மார்கெட் போன பிறகு, அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை என்றும் முழு படை பலத்தோடு வந்துள்ளோம் என்றும் பேசினார். ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் போன பிறகே கட்சியை ஆரம்பித்துள்ளதாகவும் ஆவேசமாகப் பேசினார்.
தொடர்ந்து கூட்டணி குறித்துப் பேசிய விஜய், "மாபெரும் மக்கள் சக்தி அணி அணியாக நம்மிடம் இருக்கும்போது அடிமைக் கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இது சுயம் இழந்த கூட்டணி இல்லை.. சுயமரியாதை கூட்டணி. ஒரு பக்கம் அடிபணிந்துவிட்டு.. இன்னொரு பக்கம் வந்து மதச்சார்பற்ற கூட்டணி என மக்களை ஏமாற்ற மாட்டோம்" என்றார்.
ஆட்சியில் பங்கு
தவெக கூட்டணியில் சேரும் கட்சிக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுக்கப்படும் என்று விஜய் முன்பே தனது முதல் மாநாட்டில் பேசியிருந்தார். இன்றைய தினம் அதை மீண்டும் உறுதி செய்தார். எல்லாக் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என்பதை அவர் திட்டவட்டமாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications