சேனலுக்கு 60 பேர்.. ஒட்டுமொத்த ஊடகங்கள்! தவெக மாநாட்டில் 1000 நிருபர்கள் முகாமிட்ட ரகசியம் என்ன?
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் நிலையில் நிமிடத்திற்கு நிமிடம் மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தவெக நிர்வாகிகளை விட நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். தமிழக ஊடகங்கள், தேசிய ஊடகங்கள், யூட்யூப் சேனல்கள் என வீடியோ எடுக்க வந்தவர்கள் எண்ணிக்கை மட்டுமே 5 ஆயிரத்தை கடக்கும் என சொல்லப்படுகிறது.
தமிழக அரசியலில் புதிய வரவாக நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை கடந்த ஆண்டு தொடங்கினார். வடமாவட்டமான விழுப்புரத்தில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. தென் மாவட்டத்திலும் தனக்கு இருக்கும் செல்வாக்கை வெளிக்காட்ட விஜய் தேர்ந்தெடுத்தது மதுரையை..
சென்டிமென்டாக அது விஜயகாந்தின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநாடு நடத்துவதற்கு கிட்டத்தட்ட 1000 ஏக்கர் பரப்பலாவிலான நிலம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மாநாட்டு திடலுக்கு மட்டும் 300 ஏக்கர் பரப்புளவிலான நிலமும், பார்க்கிங் உள்ளிட்டவருக்கு சுமார் 500 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

தவெக மதுரை மாநாடு
மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடக்கும் என்கின்றனர் நிர்வாகிகள். தொண்டர்கள் வருகையை முன்னிட்டு மூன்று லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. 90 பகுதிகளாக இடம் பிரிக்கப்பட்டு தனித் தனியாக இயற்கை வசதி செய்யப்பட்டு இருக்கிறது.மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் கட்சி நிர்வாகிகளை விட செய்தியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
தமிழக வெற்றி கழகம்
உள்ளூர் முதல் தேசிய ஊடகங்கள் வரை தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. ஒரு வாரத்திற்கு முன்பே பிரபல செய்தி சேனல்களின் நிருபர்கள் மதுரையில் முகாமிட்டு மாநாடு தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். நேற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் முக்கிய செய்தியாளர்களை ஊடகங்கள் மதுரைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. குறைந்தபட்சம் 20 இலிருந்து 60 வரை ஒவ்வொரு சேனலும் தங்கள் செய்தியாளர்களை மாநாட்டு பணியில் ஈடுபடுத்தி இருக்கிறது.
ஊடக கவனம்
செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், அசைன்மென்ட், நேரலை தொழில்நுட்ப பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்திருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் யூட்யூப் சேனல்கள், இன்ஸ்டாகிராம் இன்ஃப்லியன்ஸர்கள் என மீடியா என்று எடுத்துக் கொண்டால் 5000க்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருப்பார்கள் என்கின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தினர். இது தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் எண்ணிக்கை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications