வேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிவிப்பு
மதுரை: வேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தனது செய்தி குறிப்பில் அறிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்தவர் எம்.வி. முத்துராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான நிறுவனம் வேலம்மாள் கல்வி குழுமம்.இவர், கடந்த 1986-ம் ஆண்டு அவருடைய தாயார் வேலம்மாள் பெயரில் சென்னை முகப்பேரில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றை தொடங்கினார்.
பின்னர் திருவள்ளூர், காஞ்சீபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வேலம்மாள் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு அங்கும் செயல்பட்டு வருகின்றன.

ஒரு லட்சம் மாணவர்கள்
வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதாக கூறப்படுகிறது. சுமார் 10 ஆயிரம் ஊழியர்களும் பணியாற்றி வருவதாக கூறப்பபடுகிறது. இந்த நிறுவனத்தை எம்.வி. முத்துராமலிங்கத்தின் மகன்கள் எம்.வி.வேல்முருகன், எம்.வி.எம்.வேல்மோகன், எம்.வி.எம்.சசிகுமார் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

அதிரடி ரெய்டு
வேலம்மாள் கல்வி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்துவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 250 வருமானவரித்துறை அதிகாரிகள், 50 குழுக்களாக பிரிந்து, வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள், முகப்பேரில் உள்ள நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த இரண்டு நாட்களாக தீவிர சோதனை நடத்தினர்.

சோதனை நிறைவு
சென்னை, மதுரை, தேனி, கரூர், திருவள்ளூர் உள்பட 64 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை இன்று நிறைவு பெற்றது. பள்ளி நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் சில முக்கிய சொத்து ஆவணங்கள், தஸ்தாவேஜூகள் கிடைத்து உள்ளன. இந்த சோதனையில் அந்நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை
2 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதற்கட்ட தகவல்கள்தான் என்றும் முழு விசாரணைக்கு பிறகே இறுதி நிலவரம் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல கல்வி நிறுவனமான 532 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications