விஜய் அண்ணன் அண்ணாமலை தம்பி.. பாஜக பாதயாத்திரையில் கொடியுடன் வந்த விஜய் மக்கள் இயக்கத்தினர்! பரபர!
மதுரை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் நடைபயணத்தில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்று ஆதரவு அளித்துள்ளனர். விஜய்யின் தம்பி அண்ணாமலை, இருவரும் ஒரே கொள்கையில் தான் செயல்படுகிறார்கள் என அண்ணாமலை பாதயாத்திரையில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் பங்கேற்ற விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் மாநிலம் தழுவிய பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை இன்று மதுரையில் தனது நடைபயணத்தைத் தொடங்கினார்.

மதுரையில் நடைபெற்ற பாஜக பாதயாத்திரையில் விஜய் மக்கள் இயக்கக் கொடிகளுடன், விஜய் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து இந்த பாதயாத்திரையில் கலந்து கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்புத் தலைவர் சி.கே.பத்ரி சரவணன் உளிட்ட ஏராளமானோர் அண்ணாமலையின் பாதயாத்திரையில் பங்கேற்றனர்.
விஜய் மூத்தவர், அண்ணாமலை இளையவர். விஜய்யும் அண்ணாமலையும் அண்ணன் தம்பி தான். இருவரும் ஊழலை ஒழிக்க வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். நல்ல விஷயத்தை யார் செய்தால் என்ன? நல்ல விஷயத்துக்கு ஆதரவு கொடுப்பதுதான் நல்ல மனிதர்களுக்கு அடையாளம்.
விஜய்யை அரசியலுக்கு அழைக்கிறோம். அவரும் வந்துவிடுவார். விஜய் அண்ணன் ஊழலை ஒழிக்க வேண்டும் என சொல்கிறார். அண்ணாமலை அண்ணனும் சொல்கிறார். இப்போது இருப்பதில் இந்த நல்ல கட்சியில் சேர்ந்து பணியாற்றச் சொல்கிறோம் என விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், விஜய் மக்கள் இயக்கக் கொடியுடன் அண்ணாமலையிடம் சென்று தங்கள் ஆதரவைத் தெரிவித்து பாதயாத்திரையில் பங்கேற்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய், அரசியல் ரீதியாக பல்வேறு பணிகளை முன்னெடுத்து வரும் சூழலில், விஜய் மக்கள் இயக்கத்தினர் அண்ணாமலையின் பாதயாத்திரையில் பங்கேற்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், விஜய்யின் நடவடிக்கைகள் குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதக்கு பதிலளித்த அண்ணாமலை, "யார் ஒருவர் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், ஊழலை ஒழக்கக் கூடிய ஒரு கட்சியை உருவாக்கப் போறேன், தமிழ் மக்களுக்காக வரப்போறேன் எனக்கூறி அரசியலுக்கு வருகிறாரோ, அவரை பாஜக வரவேற்கிறது.
வாருங்கள். மக்கள் மன்றத்தில் எல்லா கட்சியும் போய் நிற்போம். மக்களிடம் நமது கொள்கைகளைச் சொல்வோம். மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் வரட்டும். மக்கள்தான் எஜமானர்கள். விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக வரவேண்டும். எந்த தீய சக்தியாவது இதை தடுக்க முற்பட்டால் தமிழக மக்கள் விடமாட்டார்கள்.
அரசியலுக்கு வந்தபின்பு அவருடைய கொள்கையை, சித்தாந்தத்தை, என்ன செய்யப் போறார், கனவு என எல்லாவற்றையும் சொல்லட்டும். அதன் பிறகு விரிவாக பேசலாம். தமிழக அரசியலை சுத்தப்படுத்துவதற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதை பாஜக வரவேற்கிறது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications