“சிங்கம் எப்போதும் தனக்கு இணையான மிருகங்களை மட்டுமே வேட்டையாடும்”.. சீமானை குறி வைத்த விஜய்?
மதுரை: "சிங்கம் எவ்வளவு பசி இருந்தாலும், உயிரில்லாத, கெட்டுப்போனதை தொட்டுக்கூட பார்க்காது. சிங்கம் எப்போதும் தனக்கு இணையான அல்லது தன்னை விடப் பெரிய மிருகங்களை மட்டுமே வேட்டையாடும்." என தவெக தலைவர் விஜய் இன்று பேசியது சீமானை குறி வைத்துத்தான் என சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று நடைபெற்றது. மாநாட்டு திடலுக்கு முன் கூட்டியே வந்த தொண்டர்கள் சிலர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரைக் குறிப்பிட்டு ஒழிக என்று கோஷம் எழுப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

சீமான் வைத்த விமர்சனம்
இந்நிலையில் தவெக மாநாடு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சீமான், "நான் ஒரு ஆய்வாளர் இல்லை. அது ஒரு கட்சியின் மாநாடு. தமிழக வெற்றி கழக மாநாடு நோக்கம் வெற்றி அடைந்தால் சரிதான். முதல் நாளே மாநாட்டிற்கு சென்றது நாட்டில் வேலை இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது." என்றார்.
மேலும், "தம்பியா, எதிரியா என்பதெல்லாம் முன் வைக்கிற தத்துவங்களை வைத்துத் தான். மீண்டும் அதே திராவிட கோட்பாடுகளோடு வருகிறார். திமுகவை ஒழிப்பது மட்டுமே ஒருவருக்கு லட்சியமாக இருக்க முடியாது. நான் வந்து என்ன செய்வேன் என்று சொல்ல வேண்டும். அண்ணா, எம்ஜிஆர் படங்களை வைக்கிறார்கள். அண்ணா தோற்றுவைத்த கட்சிகளைத் தான் நீங்கள் ஒழிக்க வேண்டும் என்கிறீர்கள். கடந்த 60 வருடங்களாக அண்ணா, எம்ஜிஆரின் அரசியல் தான் இங்கு இருக்கிறது.
கொள்கை கோட்பாடு
அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி கட் அவுட்களை எல்லாம் வைப்பார்களா? ஒரு நேரத்திற்கு ஒரு மாதிரி செய்வது ஏற்புடையதல்ல. அவருக்கு நண்பா, நண்பிகளாக இருப்பவர்கள் எனக்கு தம்பி, தங்கைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்காக தான் போராடுகிறேன். சரியான பாதையைக் காட்ட வேண்டியது முன்னால் இருக்கும் நம்முடைய கடமை. சரியான தத்துவத்தை முன் வைத்து நகர வேண்டும். விஜய்க்கும் சேர்த்து தான் சொல்கிறேன். ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். ஏற்கெனவே திராவிட கட்சிகள் தான் இருக்கிறார்களே., அதே கொள்கை கோட்பாடுகளோடு இன்னொரு அரசியல் கட்சி தேவையில்லை" என்றார் சீமான்.
மாநாட்டில் விஜய் பேச்சு
இந்நிலையில் இன்று நடைபெற்ற தவெக மாநாட்டில் பேசிய விஜய், "காட்டில் பல விலங்குகள் இருக்கலாம். ஆனால் சிங்கம் ஒன்றுதான். அது தனித்துவம் மிக்கது. சிங்கம் கர்ஜித்தால் 8 கி.மீ. தூரத்துக்கு அதிரும். சிங்கம் எப்போதும் வேட்டைக்குத்தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்க அல்ல. அதேபோல சிங்கம் எப்போதும் தனக்கு இணையான அல்லது தன்னை விடப் பெரிய மிருகங்களை மட்டுமே வேட்டையாடும்.
சிங்கம் எவ்வளவு பசி இருந்தாலும், உயிரில்லாத, கெட்டுப்போனதை தொட்டுக்கூட பார்க்காது. சிங்கத்திற்கு தனியாக இருக்கவும் தெரியும். கூட்டமாகவும் இருக்கத் தெரியும். தனியா வந்து தண்ணி காட்டவும் தெரியும்." எனப் பேசினார் விஜய். விஜய்யின் இந்தப் பேச்சு, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சிப்பது போல இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications