மதுரை மண் ராசியான மண்.. எதை தொடங்கினாலும் தொட்டது துலங்கும்.. பூரிப்போடு சொன்ன எடப்பாடி
மதுரை: மதுரை மண் ராசியான மண்... இந்த மண்ணிலே எதை தொடங்கினாலும் தொட்டது துலங்கும்.. என்று மதுரை அதிமுக எழுச்சி மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிசாமி நடத்தும் முதல் பிரமாண்ட கூட்டம் இது என்பதால் தமிழக அரசியலிலும் இந்த மாநில மாநாடு முக்கியத்துவம் பெற்றது. மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் இந்த மாநாடு நடைபெற்றது. சுமார் 63 ஏக்கரில் பிரம்மாண்ட மாநாட்டு பந்தல் அமைத்து இந்த மாநாடு நடைபெற்றது. ஏராளமான தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டில் பங்கேற்க நேற்று முதலே அதிமுக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டனர். சென்னையில் இருந்து சிறப்பு ரயிலிலும் அதிமுகவினர் புறப்பட்டு சென்றனர். அதேபோல், வேன், கார்கள் என நேற்று மாலை முதலே அணிவகுத்து சென்றனர். இன்று காலை முதல் மாநாடு தொடங்கியது. அதிமுக மாநாட்டில் ஒன்றரை லட்சம் பேர் இருப்பதற்கான நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன.
லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்து இருந்த நிலையில், காலை முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ரோபோ சங்கர், மதுரை முத்து, ராஜலட்சுமி - செந்தில் உள்ளிடோர் பங்கேற்றனர். அதிமுக மாநாட்டில் 32 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து 6 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பேச துவங்கினார்.
அப்போது, அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி பேச தொடங்கினார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மதுரை மண் பற்றி பேச தொடங்கினார். அவர் பேசியதாவது:- மதுரை மண் ராசியான மண்... இந்த மண்ணிலே எதை தொடங்கினாலும் தொட்டது துலங்கும்.. அப்படி ராசியான மாவட்டத்தில் இந்த மதுரை மண்னிலே நான் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டை இந்த மண்ணிலே தொடங்கியிருக்கிறோம்.
நம்மை ஆளாக்கிய எம்.ஜிஆருக்கு புகழ் சேர்க்கும் விதமாக 30.06.2017ல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இந்த மதுரை மண்ணில் தான் வெற்றிகரமாக துவங்கப்பட்டது. இந்த மதுரை மண்ணில் துவங்கப்பட்டது அத்தனையும் வெற்றி வெற்றி வெற்றிதான். தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி காட்டினோம்.
அந்த மாநாட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டோம். அந்த திட்டங்களை நிறைவேற்ற 5750 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்த அரசு அதிமுக அரசு. எம்.ஜிஆருக்கு புகழ் சேர்க்கும் விதமாக மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் பிரமாண்டமான அற்புதமான ஆர்ச் உருவாக்கினோம். அதேபோல சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மத்திய அரசிடம் பரிந்துரைத்து எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியதும் அதிமுக அரசுதான்.
ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்கும் விதமாக அவருக்கு பிரமாண்டமாக பீனிக்ஸ் பறவை மாடலில் நினைவகம் கட்டி திறக்கப்பட்டது. இப்போது தேர்தல் ஆதாயத்திற்காக திமுக கட்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. நீட் உண்ணாவிரதம் நாடகம் தான். நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications