ஒரே பள்ளியில் படிக்கும் 225 மாணவர்களுக்கு கொரோனா... அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 225 மாணவர்கள் உள்ளிட்ட 229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அங்கு ஒரே நாளில் 8,807 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,21,119ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல கொரோனா உயிரிழப்புகளும் மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் சிறப்புக் குழுக்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் வாஷிம் மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளி தற்போது கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மத்திய அந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் புதிதாக சில மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதன் பின் சில நாட்களில் 21 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாகப் பள்ளியிலுள்ள அனைவருக்கும் கொரோனா ஆர்டிபிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 225 மாணவர்கள், நான்கு ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 229 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பள்ளியைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அம்மாநிலத்திலுள்ள உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.