ஆர்யன் கானை விடாமல் விரட்டும் கேஸ்.. ரூ.25 கோடி பேரமா? கேமராவில் சிக்கியது என்ன? மீண்டும் விசாரணையா?
இன்னொரு வழக்கில் ஆர்யன்கானிடம் விசாரணை நடத்தப் போவதாக கூறப்படுகிறது
மும்பை: ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, ஆர்யன் கானிடம் விசாரணை நடத்துவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. இதில், ஷாருக்கான் மேனேஜர் பூஜா தத்லானியிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
கடந்த மாதம் 2-ந் தேதி மும்பை - கோவா சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் பங்கேற்றதாக கூறப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரை கைது செய்தனர்.
அவருடன் சேர்ந்து மேலும் சிலர் கைதானார்கள். இது சம்பந்தமான வழக்கு விசாரணை நடைபெற துவங்கியது.. மற்றொருபுறம், அரசியல் ரீதியான அதிர்வலையையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியது..
ஆர்யன்கான் ஜாமீனில் விடுதலை.. 28 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார்.. உதவிய பிரபல நடிகை!
போலியானாது
மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனையே போலியானது என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை இதுகுறித்து தெரிவித்து வந்தார். பொது சாட்சியான பிரபாகர் சாயில் என்பவர், போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக கூறினார்.. இந்த பேரம் தொடா்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் இன்னொரு முக்கிய சாட்சியான கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா, ஷாருக்கானின் மேனேஜர் பூஜா தத்லானி ஆகியோர் லோயர் பரேல் பகுதியில் அக்டோபர் 3-ந்தேதி சந்தித்து பேசியதாகவும் தெரிவித்திருந்தார்.
குற்றச்சாட்டு
பிரபாகர் சாயில் தெரிவித்த இந்த குற்றச்சாட்டு குறித்து மும்பை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... இதில் அவர்கள் பிரபாகர் சாயிலின் குற்றச்சாட்டில் சொன்னதுபோல, கடந்த 3-ந் தேதி லோயர் பரேல் பகுதியில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அருகில் ஷாருக்கானின் மேனேஜர் பூஜா தத்லானி, கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா ஆகியோர் சந்தித்ததை உறுதிப்படுத்தி உள்ளனர்.
கேமரா
அதாவது, பூஜா தத்லானியின் கார் என கூறப்படும் நீல நிற மெர்சிடஸ் பென்ஸ் காரில் இருந்து இறங்கும் பெண் ஒருவர், கிரன் கோசவியிடம் பேசும் காட்சிகள் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது... பிறகு கிரன் கோசவி, அந்த பெண், சாம் டிசோசா ஆகிய 3 பேரும் அவர்களது கார்களில் தனித்தனியாக அங்கு இருந்து புறப்பட்டு செல்லும் காட்சிகளும் அந்த கேமராவில் பதிவாகி உள்ளது.
வழக்கு பதிவு
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "கண்காணிப்பு கேமரா காட்சிகளில் 3 பேரும் சந்தித்து பேசியது மட்டும் தெரிகிறது... ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரிக்க சாம்டிசோசாவை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை" என்றார்... அதேபோல, கிரன் கோசவியின் காரில் "போலீஸ்" என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதும் தெரியவந்துள்ளது. எனவே போலீஸ் போல நடித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது..
பரபரப்பு
அதுமட்டுமல்லாமல், ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் ஷாருக்கான் மேனேஜர் பூஜா தத்லானி, ஆர்யன் கானிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.. வழக்கு விசாரணை, ஜெயில், என்று அவதிப்பட்டு ஒருவழியாக ஆர்யன்கான் வெளியே வந்துள்ள நிலையில், மீண்டும் இன்னொரு வழக்கில் விசாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.