விலை ஏறிடுச்சுதானே..4 மாசத்துக்கு வெங்காயம் சாப்பிடாம இருங்க.. மகாராஷ்டிரா அமைச்சர் 'எகத்தாளம்'!
மும்பை: வெங்காய விலை ஏறிவிட்டால் 4 மாதங்களுக்கு வெங்காயம் சாப்பிடாமல் இருக்கலாம் என பொதுமக்களுக்கு மகாராஷ்டிரா அமைச்சர் தாதா பூஸ் அறிவுரை வழங்கி இருப்பது கடும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
தக்காளி விலை விண்ணைத் தொட்ட அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் இன்னமும் விடுபடவில்லை. தற்போது வெங்காய விலையும் அதிகரிக்கும் நிலைமை உருவாகி உள்ளது.

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு இப்போதே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகிறது. இதற்காக வெங்காய ஏற்றுமதி மீது 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் சந்தைகளில் வெங்காயம் 1 கிலோ ரூ25 க்கு கிடைக்கக் கூடும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வெங்காய விவசாயிகள், வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாட்டின் மிகப் பெரிய வெங்காய சந்தையான நாசிக்கில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
தெலுங்கானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் வெங்காய விலை உயர்வு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை தருமோ என்கிற அச்சமும் இருக்கிறது. இதனால் வெங்காய கொள்முதலில் மத்திய அரசு முன்னெப்போதையும் விட படுதீவிரமாக இருக்கிறது.
இந்நிலையில் வெங்காய விலை உயர்வு தொடர்பாக மகாராஷ்டிரா அமைச்சரும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா மூத்த தலைவருமான தாதா பூஸ் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையாகவும் வெடித்திருக்கிறது. இது குறித்து தாதா பூஸ் கூறுகையில், வெங்காயத்தை வாங்க முடியாத நிலையில் இருப்பவர்கள் 4 மாதங்களுக்கு பேசாமல் வெங்காயத்தை சேர்க்காமல் சாப்பிட வேண்டும். வெங்காயம் சாப்பிடாமல் இருந்தால் எதுவும் ஆகிவிடப் போவது இல்லை என தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்திய அரசியலில் வெங்காயம் ஆட்சிகளையே கவிழ்த்திருக்கிறது. 1980-ல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய ஜனதா அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்தாமல் விட்டதுதான் காரணம். டெல்லியில் பாஜக ஆட்சியை இழந்ததற்கும் வெங்காய விலைதான் காரணம் என்பது வரலாறு.












Click it and Unblock the Notifications