மோடிக்கு ரூ.1064 மணி ஆர்டர் செய்த விவசாயி.. அசத்தல் காரணம்!
Recommended Video
மும்பை: மும்பையை சேர்ந்த விவசாயி ஒருவர் வெங்காயம் விற்ற பணத்தில் ரூ.1,064 ஐ பிரதமர் மோடிக்கு மணி ஆர்டர் செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நிஃப்தட் தெஹ்ஸில் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் சாதே, இவர் தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டுச் சென்றுள்ளார்.
அங்கு, ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு விலை கேட்கப்பட்டுள்ளது. இறுதியாக, ரூ.1.40-க்கு ஒரு கிலோ என்று 750 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்தார்.
வெங்காய விவசாயத்திற்கு செலவு செய்த பணம் கூட திரும்ப வராததால், விரக்தி அடைந்த விவசாயி சஞ்சய் சாதே, பிரதமர் மோடிக்கு ரூ.1.064 ஐ மணி ஆர்டர் செய்தார். இதில் கூடுதலாக தனக்கு ரூ.54 மணி ஆர்டருக்காக செலவானதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர், முன்னோடி விவசாயி என மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பின்னர், 2010 ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பாரக் ஒபாமா, இந்தியா வந்த போது, நான் அவருடன் இரண்டு நிமிடங்கள் உரையாடினேன், உள்ளூரில் விவசாயிகளுக்கு ரேடியோ மூலம் ஆலோசனை வழங்கி வருகிறேன் என்று கூறினார்.
நான் எந்த அரசியல் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, ஆனால் விவசாயிகளின் துயரங்களை துடைக்க அரசாங்கத்திற்கு அக்கறை இல்லாமல் இருப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது. இதனால், விவசாயத்தில் கிடைத்த 1,064 ரூபாயை பிரதமர் மோடிக்கு அனுப்பியதாக விவசாயி சஞ்சய் சாதே தெரிவித்தார்.
இந்தியா வெங்காயம் உற்பத்தியில் 50 சதவிகிதம் வடக்கு மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இருந்து தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.