மணிக்கு 250 கிமீ வேகம்! அடுத்த நொடி பல 100 மீட்டர் சிதறிய உடல் பாகங்கள்! நெஞ்சை பதற வைக்கும் விபத்து
மும்பை: மணிக்கு சுமார் 250 கிமீ வேகத்தில் சென்ற கார் எதிர்பாராத விதமாகச் சாலை தடுப்பில் மோதியுள்ளது. அதிவேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்தில் சிக்கியதாகத் தெரிகிறது. இதில் இருவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல் பாகங்கள் பல நூறு மீட்டர் வரை சிதறிக் கிடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்!
இந்த காலத்தில் இளைஞர்களில் சிலர் சாலை விதிகளை முறையாக மதிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் மிக வேகமாகக் காரை இயக்குகிறார்கள். அது சில நேரம் மோசமான விபத்திலும் கூட முடிகிறது. இதனால் மிகவும் இளம் வயதிலேயே உயிரிழப்புகளும் கூட நடக்கிறது. மீண்டும் அப்படியொரு பகீர் விபத்து இப்போது நடந்துள்ளது.

விபத்து
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை- வதோதரா நெடுஞ்சாலையில் உள்ள பத்லாப்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு கோரமான கார் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான கார் பிஎம்டபிள்யூ இசட்4 (BMW Z4) என்ற அதிநவீன கார். இது அதிக வேகத்தில் செல்லக்கூடியது. விபத்து நடந்த சமயத்தில் அந்த கார் சுமார் 250 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து வந்ததாகக் கூறப்படுகிறது. காரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், தடுப்புச் சுவரில் மோதிய வேகத்திலேயே கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரின் பாகங்கள் சாலை முழுவதும் சிதறிக் கிடந்தன.
உடல் பாகங்கள்
விபத்தின் தீவிரம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து பல மீட்டர் தூரத்திற்கு அப்பால் சிதறிக் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் நிகழ்ந்துள்ளது. காரில் இருந்தவர்கள் தித்வாலாவிலிருந்து பத்லாப்பூர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதிவேகமாகச் சென்றதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் பத்லாப்பூர் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் டிகே மற்றும் ரிகேபா ஜகாப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விசாரணை
அவர்களுடன் காரில் பயணம் செய்த ஆனந்த் என்பவர் படுகாயமடைந்தார். அவர் இப்போது தானேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் அனைவரும் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த பத்லாப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிவேகமே காரணம்!
இது தொடர்பாக பத்லாப்பூர் காவல் நிலைய அதிகாரி கூறுகையில், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். தடயவியல் நிபுணர்கள் குழுவும் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்துள்ளது. விபத்தின் போது கார் ஓட்டியவர் மது அருந்தியிருந்தாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகமாகக் காரை ஓட்டியதே இந்த கோர விபத்திற்கு முதன்மையான காரணமாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications