"ஒரு டிக்கெட் கொடுங்க".. நாக்பூர் மெட்ரோவில் பயணம் செய்த மோடி.. மாணவர்களுடன் 'ஜாலி' உரையாடல்
மும்பை: பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மகாராஷ்டிரா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்து அதில் பயணமும் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தின் போது அங்கு இருந்த பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தார். மாணவர்கள் கேட்ட கேள்விளுக்கும் அவர் பதிலளித்தார்.
மகாராஷ்டிராவுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே எல்லை தொடர்பான பிரச்சினைகள் நடைபெற்று வரும் சூழலில், பிரதமரின் இந்த மகாராஷ்டிரா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குஜராத் வெற்றி தந்த உற்சாகம்
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியானது, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக பாஜகவினர் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, குஜராத்தில் பல நாட்கள் இரவு பகலாக பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, ஓய்வு ஏதும் இல்லாமல் நாடு முழுவதும் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில்
அந்த வகையில், மகாராஷ்ட்ரா, கோவா மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கவுள்ளார். மகாராஷ்டிராவில் மட்டும் ரூ.75,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். அந்த வகையில், நாக்பூருக்கு இன்று காலை வந்த நரேந்திர மோடிக்கு அமைச்சர்களும், பாஜகவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, நாக்பூர் ரயில் நிலையத்தில் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது, நாட்டின் 6-வது வந்தே பாரத் ரயில் சேவை ஆகும்.

மெட்ரோ ரயிலில் பயணம்
அதன் பிறகு, காலை 10 மணியளவில் நாக்பூர் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாக்பூரின் சுதந்தர பூங்காவில் இருந்து கப்ரி வரை செல்லும் இந்த மெட்ரோ ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த மோடி, அதில் பயணமும் செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர்களிடம் மோடி கலந்துரையாடினார். இதில் மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு நரேந்திர மோடி ஜாலியாக பதிலளித்தார். இந்த பயணத்துக்கு பிறகு நாக்பூர் மெட்ரோ ரயிலின் 2-ம் கட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

மாலை கோவா பயணம்
இதன் தொடர்ச்சியாக, நாக்பூர் - ஷீரடியை இணைக்கும் சம்ருதி மகாமார்க் முதல்கட்ட நெடுஞ்சாலையை மோடி திறந்து வைக்கவுள்ளார். பின்னர், நாக்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இதையடுத்து, நாக்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ரூ.1,500 கோடி மதிப்பிலான தேசிய ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இவ்வாறு பல நலத்திட்டங்களுக்கு மோடி இன்று அடிக்கல் நாட்டவுள்ளார். மகாராஷ்டிராவில் பயணத்தை முடித்துவிட்டு மாலையில் கோவா செல்லும் மோடி, அங்கு புதிதாக கட்டப்பட்டிருக்கும் மோபா சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications