"ஆசை வார்த்தை கூறி பலாத்காரம்" என திருமணமான பெண் சொல்வதை ஏற்க முடியாது.. உயர் நீதிமன்றம்
மும்பை: திருமணமான பெண், வேறு ஒரு திருமணமான நபருடன் தவறான உறவில் இருந்துவிட்டு, "ஆசை வார்த்தை கூறி தன்னை பலாத்காரம் செய்துவிட்டார்" என சொல்வதை ஏற்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய வினய் (பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தன்னுடன் பல முறை பாலியல் உறவில் இருந்தார். பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக உல்லாசம் அனுபவித்த வினய், அதை வீடியோவும் எடுத்தார்.

அதன்பிறகு தன்னுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிட போவதாக மிரட்டி வருகிறார் எனக்கூறி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஷிக்ரபூர் காவல் நிலையத்தில் வினய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் வினய் மனு தாக்கல் செய்தார். இந்த முன் ஜாமீன் மனுவை செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வினய் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி மனிஷ் பிடாலே முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வினய்க்கு முன் ஜாமீன் அளித்து கடந்த 26 ஆம் தேதி உத்தரவிட்டார். விசாரணையின் போது நீதிபதி கூறுகையில், திருமணமான பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி இன்னொரு நபர் ஏமாற்றிவிட்டார் என்று சொல்வதை ஏற்க முடியாது.
இந்த வழக்கில் இருவருமே தனித்தனியே திருமணம் ஆனவர்கள். திருமணமான பெண் என்பதால், வினயை மீண்டும் திருமணம் செய்ய முடியாது என்று அந்த பெண்ணுக்கு நன்றாக தெரிந்து இருக்கும். மனுதாரர் வினயும் திருமணம் செய்தவர். எனவே, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக கூறும் குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை. ஆகவே மனுதாரர் வினய்க்கு முன் ஜாமீன் அளிக்கப்படுகிறது" என்றார்.
மேலும், இந்த வழக்கில் வினய் தற்போது வரை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். இதுவரை எந்த ஒரு வீடியோவையும் அவர் வெளியிடவில்லை. 6 மாத காலத்தில் போலீசார் விசாரணைக்கு கூப்பிடும் போது எல்லாம் அவர் ஆஜராகி வந்து இருக்கிறார். தனது செல்போனையும் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டார் என்று கூறிய மும்பை உயர் நீதிமன்றம், 25 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications