துருக்கிக்கு முகேஷ் அம்பானி வைத்த ஆப்பு.. எர்டோகன் தலையில் இடியை இறக்கிய Ajio - Myntra.. என்னாச்சு?
மும்பை: பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் துருக்கியை நம் நாட்டு மக்கள் புறக்கணித்து வருகின்றனர். பல்வேறு வர்த்தக அமைப்புகள் துருக்கி உடனான வர்த்தகத்தை ரத்து செய்துள்ளன. அந்த வகையில் தான் நம் நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானியின் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான Ajio முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
"Boycott Turkey" என்பது இப்போது நம்நாட்டில் டிரெண்ட்டிங் உள்ளது. இதன் அர்த்தம் என்பது துருக்கியை புறக்கணிப்போம் என்பதாகும். இதற்கு முக்கிய காரணம் துருக்கி நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பது தான்.

அதாவது நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் துருக்கி நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானின் 9 பயங்கரவாதிகளின் முகாம் மற்றும் விமானப்படை தளங்களை குறிவைத்து ஏவுகணை மூலம் தாக்கி அழித்தது.
இதனை துருக்கி கண்டித்தது. அதுமட்டுமன்றி துருக்கி நாட்டின் ட்ரோன்களை இந்தியாவை நோக்கி அனுப்பி பதிலடி கொடுக்க அந்த நாடு தனது சொந்த ஆபரேட்டர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. இப்படி நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட துருக்கியை புறக்கணிக்க நம் நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளனர். துருக்கிக்கு சுற்றுலா செல்வதை நம் நாட்டு மக்கள் தவிர்த்து வருகின்றனர். முன்பதிவுகளை கேன்சல் செய்து வருகின்றனர்.
அதேபோல் பல்வேறு வர்த்தக அமைப்புகள் துருக்கி பொருட்களை விற்பனை செய்யமாட்டோம் என்று அறிவித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது நம் நாட்டின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் Ajio என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் செயல்பட்டு வருகிறது.
இந்த இணையதளம் வழியாக துருக்கி நாட்டின் ஆடை பிராண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது நம் நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் துருக்கி நாட்டின் பிராண்டுகளை சேர்ந்த ஆடைகளை விற்பனை செய்யமாட்டோம் என்று Ajio அறிவித்துள்ளது. அதன்படி துருக்கி பிராண்டுகளான Koton, LC Waikiki, Mavi உள்ளிட்ட பிராண்டுகளை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான Myntra-வும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துருக்கி பிராண்டான Trendyol என்பதை இந்தியாவில் விற்பனை செய்யும் உரிமத்தை மிந்திரா பெற்றிருந்த நிலையில் அதனை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. Trendyol என்பது பெண்களுக்கான மேற்கத்திய கலாசார உடைகளுக்கு பெயர் பெற்ற நிறுவனமாகும். இந்த நடவடிக்கைகள் என்பது துருக்கி நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
முன்னதாக ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம், ஜாமியா இஸ்லாமியா பல்கலைகழகம் உள்ளிட்டவை துருக்கி நாட்டின் கல்வி நிறுவனங்களுடன் மேற்கொண்டு இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன. அதேபோல் புனே வியாபாரிகள் சங்கம் துருக்கி நாட்டில் இருந்து ஆப்பிள் இறக்குமதியை ரத்து செய்துள்ளன. துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மார்பிள் கல் தொடர்பான வர்த்தகத்தை கைவிடுவதாக உதய்ப்பூர் மார்பிள் புராசசர்ஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
இதுதவிர சிஜேசி எனும் அகில இந்திய ரத்தினம் மற்றும் நகைக்கான உள்நாட்டு கவுன்சில் சார்பில் துருக்கி, அஜர்பைஜான் உடனான வர்த்தகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கோடை காலத்தையொட்டி துருக்கிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்த மக்கள் அதனை கேன்சல் செய்து வருகின்றனர்.
துருக்கி மட்டுமின்றி அஜர்பைஜானும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து நம் நாட்டை கண்டித்துள்ளது. இதனால் துருக்கியை போல் அஜர்பைஜான் உடனான வர்த்தகம் மற்றும் சுற்றுலா பயணத்தை மக்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications