துருக்கி + வங்கதேசம் + சீனா.. ஆர்எஸ்எஸ்ஸின் வர்த்தக பிரிவு வைக்கும் வேட்டு! மோடிக்கு போகும் மெசேஜ்
மும்பை: நம் நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டு வரும் துருக்கி, வங்கதேசம் மற்றும் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது. இதுதொடர்பாக பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கப்படும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக பிரிவாக செயல்பட்டு வரும் சுதேசி ஜாக்ரன் மன்ச் அறிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கியது. கடந்த 7 ம் தேதி முதல் கடந்த 10ம் தேதி வரை பாகிஸ்தான் மீது நாம் அதிரடி தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள், 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.

இதற்கு பதிலடி கொடுக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் அந்த நாட்டுக்கு பலனளிக்கவில்லை. பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை நம் படை வீரர்கள் வானிலேயே அழித்து மாஸ் காட்டினர். பாகிஸ்தான் நம் நாட்டின் மீது குறிவைக்க தேவையான ஆயுதங்களை சீனா, துருக்கி நாடுகள் வழங்கி உள்ளன. அதுமட்டுமின்றி அந்த ஆயுதங்களை இயக்கவும் ஆபரேட்டர்களை துருக்கி, சீனா அனுப்பி உள்ளது.
இதனால் துருக்கியை மொத்தமாக நம் நாட்டு மக்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். சீனாவை ஏற்கனவே நம் நாடு புறக்கணித்த நிலையில் தற்போதும் அந்த நாட்டுக்கு எதிராக நம் மக்களின் மனநிலை மாறி உள்ளது. இந்நிலையில் தான் சுதேசி ஜாக்ரன் மன்ச் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த சுதேசி ஜாக்ரன் மன்ச் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக பிரிவின் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வரும் சீனா, துருக்கி மற்றும் வங்கதேசத்துக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று சுதேசி ஜாக்ரன் மன்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் அஸ்வனி மகாஜன் கூறுகையில், ‛‛நம் நாடு எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை எதிர்த்து வரும் சூழலில் கூட துருக்கி அந்த நாட்டுடன் தான் நிற்கிறது. இது இப்போது அல்ல. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தான் துருக்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்தோம். இப்போதும் பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதிகளின் முகாம்களில் தான் தாக்கினோம். ஆனால் துருக்கி திருந்தவில்லை. பாகிஸ்தான் பக்கம் தான் நிற்கிறது. துருக்கி நம் எதிரியை தொடர்ந்து ஆதரிக்கிறது.
அதேபோல் அண்டை நாடுகளாக உள்ள சீனா மற்றும் வங்கதேசமும் பாகிஸ்தானை தொடர்ந்து ஆதரித்து வருகிறது. ஏற்கனவே பல வர்த்தக கூட்டமைப்புகள் சீன பொருட்களை புறக்கணிக்கும் முடிவை எடுத்து விட்டன. இதுதொடர்பாக அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சீனா மட்டுமின்றி நம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் வங்கதேசம், துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும். இந்த நாடுகளிடம் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதை அடியோடு நிறுத்த வேண்டும்.
பிற வர்த்தக அமைப்புகளுடன் சேர்ந்து, சீனா, வங்காளதேசம் மற்றும் துருக்கியுடனான வர்த்தக உறவுகளை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல் அதிக ஆபத்துள்ள வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளை ஏற்பதையும் நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். நம் நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக ஓரணியில் இணைய சில நாடுகள் அணி சேர்ந்துள்ளன. அந்த நாடுகளுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வரை துருக்கி, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டும். அந்த நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என்ற பிரசாரத்தை தொடங்குவோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications