சாவர்க்கரை தொட்ட காங்! ஆவேசமான பாஜக! சாவர்க்கரின் மன்னிப்பு கடிதத்துடன் பிரஸ் மீட்டிற்கு வந்த ராகுல்
மும்பை: மகாராஷ்டிராவில் இப்போது பாத யாத்திரை சென்றுள்ள நிலையில், சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி கூறியுள்ளது பெரும் விவாதத்தையே கிளப்பி உள்ளது.
நாடு முழுக்க ராகுல் காந்தி பாத யாத்திரை சென்று வருகிறார். தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த பாத யாத்திரை இப்போது மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது.
இந்த பாத யாத்திரையில் அவர் பாஜகவையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தொடர்ந்து சாடி வருகிறார். குறிப்பாக சாவர்க்கரை அவர் தொடர்ச்சியாகவே மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி சமீபத்தில் மகாராஷ்டிராவின் வாஷிமில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் நினைவாக நடந்த விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி,"ஆங்கிலேயர்கள் அவருக்கு நிலம் வழங்கிய போதிலும், பிர்சா முண்டா ஆங்கிலேயர்களுக்குத் தலைவணங்க மறுத்தார்.. அவர் மரணத்தைத் தேர்ந்தெடுத்தார். காங்கிரஸ் அவரை முன்னுதாரணமாகக் கருதுகிறோம். ஆனால், பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் ஆங்கிலேயர்களுக்குக் கருணை மனு எழுதிய சாவர்க்கர் தான் முன்னுதாரணம்" என்றார்.

எதிர்ப்பு
ராகுல் காந்தியின் இந்த பேச்சு கடும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மக்களிடையே கொந்தளிப்பைக் கிளப்பியது. மேலும், சாவர்க்கரின் பேரன் இது தொடர்பாக போலீஸில் புகாரும் அளித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு மகாராஷ்டிராவில் காங்-உடன் கூட்டணியில் இருக்கும் தாக்கரேவின் சிவசேனாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் சாவர்க்கரை சிவசேனாவும் தலைவராக ஏற்றுக் கொண்டு உள்ளது.

உத்தவ் தாக்கரே
இது குறித்த கேள்விக்கு உத்தவ் தாக்கரே கூறுகையில், "ராகுல் காந்தி கூறியதை எங்களால் ஏற்க முடியாது. வீர் சாவர்க்கரை நாங்கள் மதிக்கிறோம். இதே கேள்வியை நீங்கள் ஏன் பாஜகவிடம் கேட்கக் கூடாது. அவர்கள் காஷ்மீரில் பிடிபியுடன் கூட்டணி வைத்திருந்தனர். பாரத் மாத கீ ஜெய் என கூடச் சொல்லாத பிடியுடன் ஏன் கூட்டணி வைத்தார்கள் என்பதை முதலில் பாஜகவிடம் கேளுங்கள்.. மேலும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக ஏன் இன்னும் சாவர்கருக்கு பாரத ரத்னா விருதை வழங்கவில்லை" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கடிதத்துடன் வந்த ராகுல்
மேலும், ஆங்கிலேயர்களிடம் இருந்து போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே காங்கிரஸுடன் கூட்டணி வைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ராகுல் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி தனது பேச்சில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை என்று தெரிவித்தார். மேலும், சாவர்கர் எழுதிய மன்னிப்பு கடிதத்தின் நகலையும் அவர் பிரஸ் மீட்டில் காட்டினார்.

என்ன எழுதி இருக்கிறார் பாருங்கள்
இது குறித்துப் பேசிய ராகுல் காந்தி, "சாவர்க்கர் விவகாரத்தில் உறுதியாகவே இருக்கிறேன். இந்த கடிதத்தைப் பாருங்கள். சாவர்க்கர், "ஐயா, எப்போதும் உங்களுக்கு கீழ்ப்படிந்து இருப்பேன்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். எதற்காக அவர் இப்படியொரு கடிதத்தை எழுத வேண்டும். பயந்து போய் தான் இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார். அவர் ஆங்கிலேயர்களுக்குப் பயந்தார். இது தான் உண்மை.

யாரும் எழுதவில்லை
சுதந்திர போராட்டத்தின் போது மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் வல்லபாய் படேல் ஆகியோர் பல ஆண்டுகளாகச் சிறையில் இருந்தனர். இருந்த போதிலும், அவர்கள் யாரும் இப்படியொரு கடிதத்தை ஆங்கிலேயர்களுக்கு எழுதவில்லை. ஆனால், சாவர்க்கர் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார். இதுதான் நாட்டில் இப்போது இருக்கும் இரு சித்தாந்தங்கள். இந்த விவகாரத்தில் எங்கள் கட்சி விவாதத்திற்குத் தயார். நாங்கள் எப்போதும் சர்வாதிகாரியாக இருந்தது இல்லை" என்றார்.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியினரும் ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக மூத்த தலைவர் திக்விஜய் சிங், "இது தான் உண்மை. ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கேட்டு, நாட்டை ஆங்கிலேயர்களுக்கு விற்றவர் சாவர்க்கர். ராகுல் காந்தி கூறிய அதே விஷயத்தைத் தான் நானும் கூறுவேன்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications