மகாராஷ்டிரா ட்விஸ்ட்.. பாஜகவுக்கு குட்பை சொல்கிறதா சிவ சேனா? சோனியாவை சந்திக்கிறார் சரத் பவார்
மும்பை: மகாராஷ்டிராவில் அரசு, அமைப்பது தொடர்பாக பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையிலான நிலைப்பாடு இழுபறியாக உள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், வரும் திங்களன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சென்று சந்திக்க உள்ளார்.
பாஜகவை அதிகாரத்தில் அமர விடாமல் தடுக்கும் முயற்சியாக, சிவ சேனாவை ஆதரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லிக்குச் செல்வதற்கு முன்னர், ஞாயிற்றுக்கிழமை மும்பையில் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து, ஆலோசனை நடத்த உள்ளார் பவார்.
"சிவசேனாவுடன் இணைந்து அரசை, உருவாக்கும் வாய்ப்பை திறந்தே வைக்க வேண்டும்" என்று மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ஹுசைன் தல்வாய் என்பவர், சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய சில தினங்களில் இந்த சந்திப்பு நிகழ உள்ளது.
கடந்த காலங்களில் "பல சந்தர்ப்பங்களில்" காங்கிரசுக்கு சிவ சேனா ஆதரவு அளித்ததை ஹுசைன் தல்வாய் சோனியா காந்திக்கு தனது கடிதத்தில், நினைவுபடுத்தினார்.
"... சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் உட்பட காங்கிரஸின் ஆதரவாளர்களில் சில பிரிவினர், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியை, உருவாக்கும் வாய்ப்பை காங்கிரசும், நமது தோழமை கட்சியான, என்.சி.பியும் திறந்தே வைத்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்" என்று அவர் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
சிவ சேனா தலைவர் சஞ்சய் ரவுத் வியாழக்கிழமை மும்பையில் பவாரை சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். செய்தியாளர்களிடம் அப்போது பேசிய சஞ்சய் ரவுத், "சிவசேனா நினைத்தால், நிலையான அரசாங்கத்தை உருவாக்க தேவையான எம்எல்ஏக்களைப் பெறும்". என்று தெரிவித்து சூட்டை கிளப்பினார்.
கடந்த வாரம் நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக மாநிலத்தின் 288 இடங்களில் 105 இடங்களையும், சிவ சேனா 56 இடங்களையும் பிடித்தது. இருவரும் இணைந்து, ஆட்சியமைக்க தேவைப்படும் 145 என்ற மேஜிக் நம்பரை கடந்துவிட்டனர். ஆனால், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி உட்பட அனைத்திலும் "50:50 ஏற்பாட்டை" அமல்படுத்த கோரிக்கை விடுப்பதால் அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் சிவசேனாவுக்கு காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஆதரவு அளிப்பது குறித்து முயற்சிகள் ஆரம்பித்துள்ளன.












Click it and Unblock the Notifications