இரண்டு நாள் அமலாக்கத்துறையை எங்க கண்டிரோலில் தாங்க! "அவரே" எங்களுக்கு வாக்களிப்பார்! சிவசேனா தாக்கு
மும்பை: மாநிலங்களவை தேர்தலில் பாஜக வெற்றியை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கடுமையாகச் சாடியுள்ளார்.
மாநிலங்களவையில் காலியாக இருந்த 57 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இருந்து ஏற்கனவே 41 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இருப்பினும், ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 16 உறுப்பினர்களைத் தேர்வு செய்யக் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.

மகாராஷ்டிரா
அதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 இடங்களுக்குக் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் பாஜகவிற்கு 2 இடம் கிடைப்பது உறுதியாக இருந்தது. ஆனால் 6வது இடத்தை பெறுவதில் சிக்கல் எழுந்தது. பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே மோதல் இருந்தது. பெரும் டிராமக்களுக்கு மத்தியில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தரப்பில் மூன்றாவது வேட்பாளராக நிறுத்தப்பட்ட தனஞ்சே மகாதிக் சிவசேனா வேட்பாளரை வீழ்த்தினார்.

சஞ்சய் ராவத்
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸின் அரசியல் நுணுக்கம் காரணமாகவே பாஜகவுக்கு அந்த கூடுதல் இடம் சாத்தியமானதாக மகாராஷ்டிரா பாஜக தலைவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். ராஜ்ய சபா தேர்தலுக்கு முன்னதாகவே, பாஜக மத்திய விசாரணை நிறுவனங்களைப் பயன்படுத்தி சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகளை பாஜகவுக்கு வாக்களிக்க வைக்க நிர்பந்தம் செய்வதாக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் சாடி இருந்தார்.

அமலாக்கத் துறை
இப்போது பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், "வெறும் இரண்டு நாட்கள் அமலாக்கத் துறையை எங்கள் கட்டுப்பாட்டில் கொடுங்கள்.. தேவேந்திர ஃபட்னாவிஸ் கூட எங்களுக்கு வாக்களிப்பார். பாஜக குதிரை பேரம் நடத்தித் தான் மூன்று ராஜ்யசபா இடங்களைப் பெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது.

கட்சி மாறினர்
அதிகப் பணம் கொடுத்து எம்எல்ஏக்களை அவர்கள் வாங்கி உள்ளனர். எங்கள் வேட்பாளருக்கு வாக்குகள் அளிப்பதாக உறுதியளித்த போதிலும் சிலர் கடைசி நேரத்தில் கட்சி மாறினர். அது தான் எங்கள் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது பகுஜன் விகாஸ் அகாடியின் (பிவிஏ) மூன்று எம்எல்ஏக்களும் சுயேச்சை எம்எல்ஏ ஒருவரும் தங்களுக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்த போதிலும், கடைசி நேரத்தில் வாக்களிக்கவில்லை" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications