"சிவசேனா vs சிவசேனா.." இடையில் புகுந்த ஆர்எஸ்எஸ்.. மகாராஷ்டிர அரசியலை மாற்றும் தசரா விழாக்கள்!
மும்பை: இன்று வட இந்தியாவில் தசரா பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், இது மகாராஷ்டிரா அரசியலிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. சிவசேனா vs சிவசேனா என்று அங்கு இன்று அரசியல் கூட்டங்கள் நடைபெறும் நிலையில், இடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதனால் மகாராஷ்டிர அரசியல் கவனிக்க வேண்டிய ஒன்றாக மாறியிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் விரைவில் சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. அங்கு அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

இன்று தசரா, அதாவது விஜய தசமி கொண்டாடப்படும் நிலையில், இன்று மகாராஷ்டிராவில் பல அரசியல் நிகழ்வுகள் நடக்கப் போகிறது. இது ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிர அரசியலையும் புரட்டிப் போடும் ஒன்றாக மாறி இருக்கிறது.
தசரா: நவராத்திரி விழாவா பத்தாவது நாள், தசரா கொண்டாடப்படும். மகாராஷ்டிராவைப் பொறுத்தவரைத் தசரா என்பது இந்து மத பண்டிகை என்பதைத் தாண்டி அரசியல் சார்ந்தும் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அங்குச் சட்டசபைத் தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை வெளிப்படுத்தவும் ஆதரவைத் திரட்டவும் தசராவைப் பயன்படுத்திக் கொள்வார்கள். குறிப்பாக இந்த முறை அது சிவசேனா vs சிவசேனா என்று மாறியுள்ளது.
சிவசேனா vs சிவசேனா: சிவசேனா இப்போது தாக்ரே சிவசேனா மற்றும் ஷிண்டே சிவசேனா என இரு பிரிவுகளாகப் பிளவுபட்டு இருக்கும் நிலையில், இரண்டு பிரிவுகளுமே தசரா நிகழ்வை நடத்துகின்றன. மகாராஷ்டிர முழுக்க பல்வேறு பேரணிகளை இந்த இரு பிரிவுகளுமே ஏற்பாடு செய்துள்ளதாம்.
மும்பையை பொறுத்தவரை இங்குள்ள ஐக்கானிக் சிவாஜி பூங்காவில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவின் பிரிவு கூட்டம் போடுகிறார்கள். இந்த சிவாஜி பூங்காவில் தான் 1960களில் சிவசேனா கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே அக்கட்சி தசரா கூட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் ஷிண்டே தரப்பு ஆசாத் மைதானத்தில் கூட்டத்தை நடத்துகிறது. இரு தரப்புமே தங்களை ரியல் சிவசேனா என்று சொல்லிக் கொள்ளும் நிலையில், இந்த தரா நிகழ்வுகள் அங்கு முக்கியமானதாக மாறியிருக்கிறது.
தாக்ரே: ஒரு பக்கம் உத்தவ் தாக்ரே தரப்பு, மராத்தியர்களின் விசுவாசம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்று உணர்ச்சிகரமான வேண்டுகோள் விடுத்துள்ளது. லோக்சபா தேர்தல் முடிவுகளே யார் ரியல் சிவசேனா என்பதைக் காட்டிவிட்டதாகவும் சட்டசபைத் தேர்தலில் அது தொடரவே போகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மறுபுறம், பால் தாக்கரேவின் இந்துத்துவா பாதையில் பயணிப்பது தாங்கள் தான் என்று ஷிண்டே சிவசேனா தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ்: இது ஒரு பக்கம் இருக்க ஆர்எஸ்எஸ் அமைப்பும் அங்குக் கூட்டத்தை நடத்துகிறது. தசரா கூட்டம் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் ஆர்எஸ்எஸ் அமைப்பு இதே தசரா நாளில் தான் உருவாக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தசரா நிகழ்ச்சி நாக்பூரில் உள்ள ரெஷிம்பாக் மைதானத்தில் இன்று காலை நடந்தது. அதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசிய பேச்சும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாலையும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகள் சில நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள் மகாராஷ்டிர அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது..அங்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று நடைபெறும் தசரா நிகழ்வுகள் முக்கியமானதாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications